Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரசுடன் கூட்டணி நம்பிக்கையை இழந்துவிட்ட ஜெயலலிதா: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: ஜெயலலிதாவின் உண்மை சொரூபத்தை அறிந்துதான் காங்கிரஸ் தலைமை அவரை ஒதுக்கியிருக்கிறது. எப்படியும் காங்கிரஸ் கட்சியோடு உறவு ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஜெயலலிதா இப்போது அந்த நம்பிக்கையை இழந்து பரிதாபகரமாக காட்சியளிக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுளளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி:2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிபிஐ விசாரணை புஸ்வாணம் ஆகிவிட்டது என்று ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளாரே. இது என்ன புதுக்கதை?

பதில்: "சீச்சீ''இந்தப்பழம் புளிக்கும் என்ற கதை தான். கடந்த 2-1-2011 அன்று பிரதமர் மன்மோகன் சிங் சென்னைக்கு வந்தபோது, நான் அவரை சந்தித்த பிறகு, நிலைமை மாறி விட்டது என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே முக்கியமாக சொல்லியிருக்கிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைப்பதற்காக ஜெயலலிதா எந்த அளவிற்கு முயற்சி செய்தார், யார் மூலமாக முயற்சி செய்தார், ராசாவை கைது செய்தால் மத்திய அரசுக்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி அதிமுக ஆதரவளிக்கும் என்றெல்லாம் சொன்னார்.

அவர் பேசும் கட்சி நிகழ்ச்சிகளிலே காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியை உறுதியாக்கி விடுவேன் என்பதைப்போல சவால் விட்டு பேசினார். நல்ல செய்தியை எதிர்பாருங்கள் என்று குடுகுடுப்பை அடித்தார். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், பிரதமரும் திமுகவுடன் கூட்டணி வலுவாக உள்ளது என்று தெரிவித்த பிறகு ஜெயலலிதாவின் 'குட்டு' அம்பலமாகிவிட்டது. உடனே அடுத்த நிமிடமே மத்திய அரசை தாக்குகின்ற முயற்சியிலே ஈடுபட தொடங்கி விட்டார்.

தொலைதொடர்பு துறை அமைச்சர் பொறுப்பை புதிதாக ஏற்றுள்ள கபில்சிபலை கடுமையாக ஜெயலலிதா தனது அறிக்கையிலே தாக்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் உண்மை சொரூபத்தை அறிந்துதான் காங்கிரஸ் கட்சியின் தலைமை அவரது உறவை திரும்பிப் பார்க்காமல் ஒதுக்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியோடு உறவு எப்படியும் ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஜெயலலிதா அந்த நம்பிக்கையை இழந்து பரிதாபகரமாக இப்போது தான் மற்ற கட்சிகளை குறிப்பாக கம்யூனிஸ்டு கட்சிகளை ஏறெடுத்து பார்க்க தொடங்கியிருக்கிறார்.

கேள்வி:இந்திய மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றதை பற்றி பிரதமருக்கு தாங்கள் கொடுத்த தந்தியின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை?

பதில்:மத்திய அரசு டெல்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கே அழைத்து இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இலங்கை கடற்படையினர் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். மீனவர்களை தாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்திய அரசு சார்பில் கண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் காந்தா மூலம் இந்த சம்பவம் பற்றி இலங்கை அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீசிடம் கொழும்பில் உள்ள இந்திய தூதர் இந்த நிகழ்ச்சி குறித்து எடுத்து சொல்லியிருக்கிறார்.

2008ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டுமென்று இலங்கை அரசுக்கு இந்திய அரசின் சார்பில் பலமுறை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்குப்பிறகு, இலங்கை அரசின் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் 2008ம் ஆண்டு 1,456 என்ற எண்ணிக்கையில் இருந்தது 2009ம் ஆண்டில் 127 என்ற அளவிற்கும், 2010ல் 30 என்ற அளவிற்கும் குறைந்துள்ளது.

இதற்கிடையே தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது இலங்கை கடற்படையினர் அல்ல என்று இந்தியாவுக்கான இலங்கைத்தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கூடாது, அவர்களை தாக்கக்கூடாது என்று இலங்கை கடற்படையினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையைக் கடந்து வந்தாலும் கூட தாக்கக்கூடாது என்று ஆணை பிறப்பித்தோம். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து இந்தியா அதிகாரப் பூர்வமாக இலங்கை அரசுக்கு தெரிவித்திருப்பதால், இதுகுறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கேள்வி:மருத்துவக் கல்லுரிகளில் மாணவர்களை சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிக்கை வெளியிட்டதும், ஜெயலலிதா உங்களை கடுமையாக தாக்கி, நீங்கள் அதிலே எதுவுமே செய்யவில்லை என்பதைப்போல அறிக்கை விடுத்திருந்தாரே?

பதில்: நாட்டிலே எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு காரணம் நான்தான் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்து கொண்டிருக்கிறார். பொது நுழைவுத் தேர்வு கூடாது, மாணவர்கள் அதனால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் திமுகவின் கருத்து. இந்த அரசின் கருத்து. மீண்டும் பொது நுழைவுத்தேர்வு வந்து விடக்கூடாது என்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசுடன் அதற்காக தொடர்ந்து பேசி வருவதோடு, நீதிமன்றத்திலும் அதற்கான தடையாணை பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன, எனவே தங்கள் அனுமதியில்லாமல் வெளியிடப்பட்ட அறிவிக்கை செல்லாது என்றும், அந்த அறிவிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.

மேலும் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே பொது நுழைவுத் தேர்வு விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரி குலாம்நபி ஆசாத், மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களின் மாநாட்டினை கூட்டியிருந்தார். அந்த மாநாட்டில் 16 மாநிலங்களை சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மற்றும் மாநில அரசுகளின் செயலாளர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறுத்தி வைப்பது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். தற்போது இதுதான் நிலை.

பொது நுழைவுத் தேர்வுகளை நடத்தத் தேவையில்லை என்று இந்த அளவிற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜெயலலிதா எப்படியாவது பொது நுழைவுத் தேர்வு வந்து விடாதா, அதை வைத்துக்கொண்டு மாநில அரசின் மீது குறைகூறி மற்றொரு அறிக்கை வெளியிட வாய்ப்பு கிடைக்குமே, அதனால் மாணவர்கள் பாதித்தால் நமக்கென்ன என்று நினைக்கிறார், அவ்வளவு தான்!.

கேள்வி:சென்னையில் குடிசைப்பகுதி மக்கள் வாழ்ந்து வரும் நிலத்தை ரியல் எஸ்டேட் நடத்துவோர் சிலருக்கு கொடுத்து விட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதனால் 7,000 குடும்பங்கள் வாழும் இடத்தை இழந்துவிட போகின்றன என்றும் ஒரு நாளிதழ் பெரிய அளவில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறதே?

பதில்: சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித் தருவதற்காக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் முன்னர் மெரீனா பகுதியில் கட்டப்பட்டிருந்த 2 ஆயிரத்து 862 குடியிருப்புகளை இடித்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக, உலக வங்கி திட்டத்தின் மூலம் 7 ஆயிரத்து 320 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, 2006ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. சீனிவாசபுரம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடிசைகளில் வாழ்ந்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பு அப்பகுதியில் கிடைக்கவில்லை.

இதனால் உலக வங்கி திட்டத்திலிருந்து பிரித்து, மாநில நிதி ஆதாரத்திலிருந்து வீடுகள் கட்டி வழங்கிட, 2010ம் ஆண்டு ஜனவரியில் ஒப்புதல் வழங்கப்பட்டது. சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடிசைகளில் வாழ்ந்து வருவோர்க்கு, பாதுகாப்பான வீட்டுவசதி அமைப்பதற்கு ஏற்ற பகுதியாக பட்டினப்பாக்கம் பகுதியில் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

சீனிவாசபுரம் பகுதியில் உள்ள மொத்த நிலம் 51 ஏக்கரில், 21 ஏக்கர் நிலப் பரப்பளவில் மட்டும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வாடகை குடியிருப்புகள் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தன. அவை இடிக்கப்பட்டு, புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியமும் சீனிவாசபுரம் மற்றும் பட்டினப்பாக்கம் திட்டப்பகுதிகளை ஒருங்கிணைத்து, மேம்படுத்துவதற்கான மாதிரித்திட்டம் ஒன்றை தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது இந்த பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு 1,492 குடியிருப்புகளும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு 1,380 குடியிருப்புகளும் சொந்த மானவை. இந்த பகுதிக்கு ஒரு விரிவான திட்டத்தினைத் தயாரிக்க தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஒரு முகமை நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு தலைமைச் செயலரின் தலைமையின்கீழ் அமைக்கப்பட்டுள்ள உயர் நிலைக்குழுவின் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். இந்தத் திட்டப் பகுதியில் சீனிவாசபுரம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதியில் வாழும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து, அங்கு வாழும் 3 ஆயிரத்து 500 குடும்பங்களை குடியமர்த்தும் நோக்கத்தோடு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த குடும்பங்கள் பட்டினப்பாக்கம் பகுதியிலேயே குடியமர்த்தப்படுவார்கள். எனவே, இந்த பகுதியிலிருந்து இந்த குடும்பங்களை அகற்றுதல் மற்றும் வேறு இடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற கேள்விகளுக்கே இடமில்லை. மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நொச்சிக்குப்பம் மற்றும் நொச்சிநகர் பகுதிகளில் 1,452 குடியிருப்புகளுக்கான பணிகள் அதே பகுதிகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு குடிசைவாழ் குடும்பங்களுக்கு வீட்டுவசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் முன்னுரிமை வழங்கி வருகின்றது.

சீனிவாசபுரம் மற்றும் பட்டினப்பாக்கம் திட்டப்பகுதிகளில் ஏற்கனவே இருந்த 1,492 குடியிருப்புகளுக்குப் பதிலாக, தற்போது 3 ஆயிரத்து 500 குடியிருப்புகளாக அதிகரித்து கட்ட திட்டமிடப்பட்டுள்ளதில் இருந்தே; தமிழக அரசு குடிசைகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் நலனில் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளது என்பது தெளிவாகும்.தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அளிக்கும் பொறுப்பினை பெற்றுள்ளது.

சென்னை நதிகள் சீரமைப்பு குழுமமோ அல்லது தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனமோ இத்திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனங்கள் அல்ல. தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தில் அய்.எல்.எப்.எஸ். நிறுவனம் மிகக் குறைந்த பங்குகளையே கொண்டுள்ளது.

மேலும், வில்பர்ஸ்மித் அசோசியேட்ஸ் நிறுவனத்தார் இத்திட்டத்திற்கு வெளிப்படையான போட்டி ஏலமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கலந்தாலோசனையாளர்கள் ஆவர். இதில் ஏதும் முரண்பாடுகள் இல்லை. அந்த நாளிதழில் எழுதியிருப்பதைப் போல தனியாருக்காக வணிக மேம்பாட்டிற்கு 67 சதவீதம் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு மாறான செய்தியாகும். மேலும், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வணிக வளாகங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவை அமைக்கப்படும் என்பதும்; சீனிவாசபுரம் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உருவாக்கப்பட உள்ளது என்பதும் எவ்வித அடிப்படையும் இல்லாத தவறான தகவலாகும்.

கேள்வி:நாமக்கல் மாவட்டத்தில் கலியனுர் அமானி கிராமத்தில் தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளதாக ஒரு நாளிதழ் முதல் பக்கத்தில் பெரிய அளவில் பிரசுரித்துள்ளதே?

பதில்:கலியனுர் அமானி கிராமத்தில் 42 அருந்ததியர்கள் சுமார் 12 ஆண்டுகளாக 58/2 பி.1 என்ற சர்வே எண்ணில் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள். இந்த இடம் அவர்களுக்காக சட்டப்படி ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலமாகும். இந்த இடத்திற்குப் பக்கத்தில் உள்ள சொந்த பட்டா நிலத்திற்கு உரிமையுடைய ஒருவர், தனது பட்டா நிலத்தில் ஒரு சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார்.

இந்த சுவரால் அருந்ததிய மக்களுக்கு எவ்விதமான இடைறும் இல்லை என்றும், அதனை தீண்டாமைச் சுவர் என்று சொல்லுவதே தவறு என்றும் அருந்ததிய மக்களே எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த நாளிதழில் எழுதியிருப்பதைப்போல அருந்ததிய மக்களை தனிமைப்படுத்தியோ அல்லது தள்ளி வைத்தோ இந்த சுவர் கட்டப்படவில்லை என்பது தான் உண்மை. எனவே தீண்டாமைச் சுவர் இருப்பதாக எழுதியிருப்பது பொய்ச்செய்தி! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருணாநிதியுடன் வீரப்பமொய்லி சந்திப்பு:

இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதியை மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது காங்கிரஸ்-திமுக உறவு, ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சட்டத்துறையின் நடவடிக்கைகள் குறித்து மொய்லி பேசியதாகத் தெரிகிறது.

மேலும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ் காந்தியின் பெயர் சூட்டப்படும் என்ற முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு காங்கிரஸ் தலைமை சார்பில் மொய்லி நன்றி தெரிவித்ததாகவும் தெரிகிறது.
கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+