5 மாதத்தில் திமுகவினர் இன்னல்களை சந்திப்பர்-விஜயகாந்த்
விழுப்புரம்: வரும் சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்றும் வெற்றிப் பெறுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அங்கு விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, அப் பகுதி பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்
கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திராவிற்கு மறுவாழ்வு கொடுப்போம் என்று பேசியதால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. அவருடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது வேதனைக்குரியது.
உழைக்காமலேயே சொத்துகளை குவித்து வைத்துள்ள திமுகவினர் இன்னும் 5 மாதம் கழித்து கடும் இன்னல்களை சந்திக்கவுள்ளனர்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் கருணாநிதியின் ஆட்சியில் வெங்காயம் என்ன விலை?. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பில்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது?
நான் கட்சி ஆரம்பித்தப் பின் தான் கருணாநிதியின் மறுப் பக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. சுய மரியாதை இயக்கத்திலிருந்து வந்த கருணாநிதி மஞ்சள் துண்டும், சிவப்புக் கல் பதித்த மோதிரமும் போட்டிருப்பது ஏன்?.
ஊருக்கெல்லாம் தமிழ் பெயர் வைக்கும் கருணாநிதி, தன் மகன் ஸ்டாலினுக்கு ஏன் பெயர் மாற்றம் செய்யவில்லை?.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம். படித்தவருக்கு மட்டுமின்றி படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்போம். அன்னை மொழியைக் காப்போம். அனைத்து மொழியையும் கற்க வழி செய்வோம்.
வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பினால் நான் விழுப்புரத்தில் போட்டியிடவும் தயார். தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி (விழுப்புரம் பொன்முடியும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது) முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்றும் வெற்றிப் பெறுவேன்.
பன்றியோடு சேர்ந்த கன்று போல இன்று தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி நிலை உள்ளது என்றார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications