சபரிமலை விபத்தில் பலியான தமிழர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்-கருணாநிதி
சென்னை: சபரிமலை விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவி்த்துள்ளார்.
சபரிமலையில் நடந்த விபத்தில் 109 பக்தர்கள் பலியாகினர். இதில் தமிழக பக்தர்கள் 35 பேரும் அடங்குவர்.
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சபரிமலைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் வனப்பகுதியில் திடீரென ஜீப் ஒன்று கூட்டத்திற்குள் பாய்ந்ததால் ஏற்பட்ட நெரிசலில் பலர் மரணம் அடைந்துள்ளனர்.
மரணம் அடைந்தவர்களுள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்று முதல் நிலைத் தகவல் மூலம் தெரிகிறது. மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி அந்தக் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும்,
காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் மருத்துவச் செலவிற்கு வழங்கப்படுமென்றும் அறிவித்துள்ளார்.
தேவையான மருத்துவ உதவிகளையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பிட ஏற்பாடு செய்யும்படி தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் முத்துவீரன், போலீஸ் எஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் தமிழக அதிகாரிகள் குழுவினர் குமுளி அரசு மருத்துவமனைக்கு வந்து தமிழக பக்தர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கைக எடுத்தனர்.
இந்த சம்பவத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த 28 பக்தர்களும், ஆந்திராவைச் சேர்ந்த 22 பேரும், கேரளத்தைச் சேர்ந்த 6 பேரும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த 2 பேரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் பலியாகியுள்ளனர். மற்ற பக்தர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் தெரியவில்லை.
விபத்து நடந்த பகுதி மிகவும் குறுகலான இடம் என்பதால் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியவில்லை. இதனால் மீட்புப் பணியை உடனே தொடங்க முடியவில்லை.
விபத்து நடந்த இடத்தில் தகவல் தொடர்பு வசதியும் இல்லை. செல்போன்களும் செயல்படவில்லை.
கேரள முதல்வர் அச்சுதானந்தன் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் அந்தப் பகுதியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை நேரில் கண்காணித்து வருகின்றனர்.
பலியானவர்கள் குடும்பத்துக்கு கேரள அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெரிசல்-பலிகள் குறித்த தகவல்கள் பெற குமுளி காவல் நிலையத்தை 04869-222049 மற்றும் 252244 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications