மதுரையில் ஜல்லிக்கட்டு முடிந்தது-2 பேர் பலி-100 பேர் காயம்
மதுரை: பொங்கல் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
அவனியாபுரத்தில், ஆண்டுதோறும் தை முதல் நாளன்று, பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி நடந்த ஜல்லிக்கட்டில் 154 காளைகளும், 146 வீரர்களும் கலந்து கொண்டனர். அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 45 வயதான ராமு என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அடுத்து பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இங்கு அரசு மற்றும் உச்சநீதிமன்றம் விதித்த வழிமுறைகளின் அடிப்படையில் போட்டி நடந்தது.
பார்வையாளர்களையும், வீரர்களையும் தனியாக பிரிக்கும் வகையில் காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. வீரர்களுக்கும், காளைளுக்கும் டோக்கன் தரப்பட்டன. மருத்துவ வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 284 காளை மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.
இந்த ஜல்லிக்கட்டில் 70 பேர் காயமடைந்தனர். அதில் பார்வையாளர் வரிசையில் இருந்த பாக்கியராஜ் என்பவர் காளை முட்டி படுகாயமடைந்து உயிரிழந்தார்.
நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை. காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் மொத்தம் 60 பேர் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த 14 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திடீர் மோதல்-கல்வீச்சு-தடியடி-பாதியில் நிறுத்தம்:
ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தபோது, மதியம் 3.15 மணிக்கு, காளைகள் வெளியேறும் பகுதியில் காளைகள் வெளியேறி செல்ல முடியாதபடி பார்வையாளர்கள் மொத்தமாக கூடி நின்றனர்.
இதனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், பார்வையாளர்களை ஒதுங்கி நிற்கும்படி கூறினர். அப்போது பார்வையாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென்று பார்வையாளர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பார்வையாளர்கள் கல் வீசியதில் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, ஏட்டு விநாயகமூர்த்தி மற்றும் 10 போலீசார் காயம் அடைந்தனர். போலீசார் தடியடி நடத்தியதை கேள்விப்பட்டதும் ஆங்காங்கே கூடியிருந்த பார்வையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வையாளர்கள் கல் வீசியதில் ஒரு போலீஸ் ஜீப், 3 அரசு பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியதில் காயம் அடைந்த பார்வையாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் அலங்காநல்லூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
போலீசார் தடியடி நடத்தியதை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவானதால் மதியம் 3.15 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடுவதற்காக தயார் நிலையில் நின்று கொண்டிருந்த 50 காளைகள் திருப்பி அனுப்பப்பட்டன. இருந்த போதிலும் அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications