காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆரும் மக்கள் வரிப்பணத்திலிருந்துதான் இலவசங்களைக் கொடுத்தார்கள்-பொன்முடி
விழுப்புரம்: மக்கள் வரிப் பணத்தில் இலவசங்கள் தருவதாகக் கூறுகின்றனர். இதற்கு முன் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்றவர்களும் இலவசங்களை அரசு பணத்தில் தான் வழங்கினர் என்று கூறியுள்ளார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
விழுப்புரத்தில் நடந்த தேமுதிக கூட்டத்தின்போது விஜயகாந்த் பேசுகையில், பொன்முடியை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்று கூறியிருந்தார். கருணாநிதியை எதிர்த்தும் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், தமிழக அரசின் இலவசத் திட்டங்களையும் விமர்சித்திருந்தார். மக்கள் வரிப்பணத்திலிருந்து அதை அவர்களுக்கே கொடுத்து இலவசம் என்று கூறி மோசடி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பொன்முடி தற்போது பதிலளித்துள்ளார்.
விழுப்புரத்தில், மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் பேரவை சார்பில், பள்ளிவாசல் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
அதில் கலந்து கொண்டு 60 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார் பொன்முடி. அப்போது அவர் பேசுகையில்,
சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் முதல்வர் கருணாநிதிதான். தேர்தல் நேரங்களில் மாநாடு, கூட்டம் என்றால் கோரிக்கைகள் இல்லாமல் இருக்காது. தற்போது முஸ்லிம்கள் ஐக்கிய ஜமா அத் பேரவை சார்பில் கேட்டுள்ள கோரிக்கைகள் நியாயமானவை. முதல்வரிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன்.
ஒரு நாள் விழா நடத்தி இலவசங்கள் வழங்கி விட்டு தம்பட்டம் அடிக்கின்றனர். ஆண்டுதோறும் இலவசங்கள் வழங்கும் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளைச் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்கள் வரிப் பணத்தில் இலவசங்கள் தருவதாகக் கூறுகின்றனர்.
இதற்கு முன் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்றவர்களும் இலவசங்களை அரசு பணத்தில் தான் வழங்கினர். கடந்த நான்கரை ஆண்டுகளில் வரியை உயர்த்தாமல் இருந்தது முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மத்திய அரசு சார்பில் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தான் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
ஆத்திகம், நாத்திகம் என்பது வேறு. தி.மு.க., ஆட்சியில் தான் கோவில் பூசாரிகளுக்கு நல வாரியம் அமைத்து சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
தி.மு.க.,விற்கு ஓட்டு போடுவது ரகசியமாக இருக்கலாம். ஆனால் தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வெளிப்படையாக இருக்க வேண்டும்.
முதல்வராக மீண்டும் கருணாநிதி வந்தால் மட்டுமே கான்கிரீட் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.
மக்களுக்கு இவ்வளவு நலத்திட்டங்கள் செய்துள்ளதால், முதல்வராக மீண்டும் கருணாநிதியை தவிர யாரும் வர முடியாது. வாய்ச்சொல் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும் என்றார் பொன்முடி.












Click it and Unblock the Notifications