தூத்துக்குடியில் திருவள்ளுவர் தினத்தன்று மது விற்பனை செய்த 9 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திருவள்ளுவர் தினத்தன்று சட்டவிரோதமாக மது பானங்களை விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 202 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நேற்று முன்தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மதுபானங்கள் விற்கவும் தடை விதிக்கப்பட்டது.
அன்றஉ கரிநாள் என்பதால் அசைவ பிரியர்கள் கறி விருந்துடன் மது அருந்துவது வழக்கம். இதனால் மதுபானங்களுக்கு கூடுதல் தேவை இருக்கும் என்பதால் சிலர் பொங்கலன்றே மதுபாட்டில்களை கொள்முதல் செய்து அவைகளை கூடுதல் விலைக்கு விற்கலாம் என்ற எண்ணத்தில் பதுக்கி வைத்திருந்தனர். சிலர் ஆங்காங்கே மறைவான இடங்களில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் தாளமுத்து நகர் கோட்டையன் தோப்பில் டி சவேரியர்புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல் பூபாண்டியாபுரம் மளிகை கடையில் மது விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி, அவரது மனைவி ராணி, சுந்தரம் மனைவி லட்சுமி ஆகியோர் கைதாகினர். இவர்களிடம் இருந்து 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முடிவைத்தானேந்தல் பகுதியில் புதுகோட்டை போலீசார் நடத்திய சோதனையில் அதேச் ஊரை சேர்நத கொம்பையா, ஆத்தூரில் புன்னைகாயலைச் சேர்ந்த அல்போன்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முனியசாமியிடம் இருந்து 2 பாட்டில்களும், அல்போன்சிடம் இருந்து 85 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு சலூன் கடையில் முத்துகுமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 பாட்டில்களையும், ஓட்டப்பிடாரம் சந்திரகிரி ரோட்டில் மது விற்ற குறுக்குசாலையைச் சேர்ந்த முத்துராமலிங்கத்தை பிடித்து 15 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications