சபரிமலை- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை தர வேண்டும்-விஜயகாந்த் கோரிக்கை
மதுரை: சபரிமலையில் பலியான ஐயப்ப பக்தர்கள் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
சபரிமலையில் நடைபெற்ற மகர விளக்கு பூஜையில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்கள் ஆவலுடன் மகர ஜோதியைக் கண்டு ரசித்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த செய்தி திடுக்கிட வைத்துள்ளது.
விபத்து நடந்து பல உயிர்கள் போன பிறகு நீதி விசாரணை நடத்துவதும், காவல்துறை புலனாய்வு மேற்கொள்வதும், மத்திய மற்றும் மாநில அரசுகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதும் ஓரளவு ஆறுதல் அளிக்குமே தவிர இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுத் தராது.
பல குடும்பங்கள் இவற்றால் நிரந்தர துயரங்களுக்கும், வறுமைக்கும் ஆளாக வேண்டி வரும். எனவே, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்காவது அரசு வேலை கொடுக்க வேண்டும்.
ஆண்டுதோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அறிந்து முன் கூட்டியே வழிகளை அதிகப்படுத்தியும், அகலப்படுத்தியும் முறையான வேலிகள் அமைத்தும் முறைப்படுத்தி இருக்கலாம்.
மேலும், கோயிலுக்குச் செல்வோரின் எண்ணிக்கையை அனுமதி சீட்டுகள் வழங்குவதன் மூலம் இத்தகைய தாறுமாறான நெரிசலை தவிர்த்து ஒழுங்காக, வரிசையாக பக்தர்களை அனுப்பியிருக்கலாம்.
திருப்பதி போன்ற திருத்தலங்களில் மக்கள் கடவுளை தரிசிக்கும் வகையில் முறைப்படுத்தி இருப்பது நினைவு கொள்ளத் தக்கது.
கேரள அரசும், கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் முன் கூட்டியே மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
இனி வரும் காலத்திலாவது ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications