கேரளாவில் ஒரே நேரத்தில் 8 கலெக்டர்கள் அதிரடி மாற்றம்
பத்தினம்திட்டா: கேரளாவில் ஒரே நேரத்தில் 8 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
சபரிமலை புல்மேடு பகுதியில் கடந்த 14-ம் தேதி மகரஜோதியை பார்த்துவிட்டு திரும்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 109 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர். இது தொடர்பாக போலீசார், வனத்துறை, தேவசம்போர்டு ஆகியோர் முரண்பாடான அறிக்கைகளை கேரள நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
தேவசம்போர்டு அறிக்கையில், புல்மேடு பகுதியில் அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசார் அறிக்கையில் புல்மேட்டில் போதிய பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மிகவும் திறமையாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்த பிறகு புல்மேட்டுக்கு 729 போலீசார் அனுப்பப்பட்டனர் என கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விபத்து குறித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் அசோக் குமார் சிங் அரசுக்கு கொடுத்த அறிக்கையில் முரண்பாடான தகவல்கள் இருந்ததாக தெரிகிறது.
மேலும் அரசு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதால் இடுக்கி கலெக்டர் அசோக் குமார் சிங் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மலப்புரம் கலெக்டர் எம்சி மோகன்தாஸ் இடுக்கி கலெக்டராக நியமிககப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் 8 கலெக்டர்கள் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டுள்ளனர். இடுக்கி கலெக்டரை மாற்றம் செய்வதற்காகவே அரசு இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.












Click it and Unblock the Notifications