கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி

தி.மு.கழக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பியின் மகள் திருமண விழா இன்று சென்னையில் நடந்தது.
அதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில்,
தத்துவ மேதை டி.கே. சீனிவாசன் பெயர்த்தி நம்முடைய அன்பிற்குரிய நண்பர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அவர்களுடைய மகள் செல்வி மாதவிக்கும் எபினேசர் ஜேசுதாஸ் சுகுமார் மகன் செல்வன் ஜான் விஜய்க்கும் நடைபெற்றுள்ள இந்த மண விழா நிகழ்ச்சியில் நானும் மணமக்களை உங்களோடு இணைந்து வாயார, மனமார வாழ்த்துகின்றேன்.
நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது இரண்டு மதங்கள் இணைகின்ற திருமண விழா இது. இதற்கோர் பெயரிட வேண்டு மென்று எனக்கு ஆணையிட்டுள்ளார். ஏதோ சட்டசபை நடைபெறுவதைப் போலவும், இதிலே மருத்துவ மனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரை வைக்க வேண்டுமென்று சொன்னதைப் போல கருதிக் கொண்டு இதற்கும் நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டுமென்று சொல்லிச் சென்றிருக்கிறார்.
ஒன்று புரிகிறது தமிழ்நாட்டில் எதற்கு, யாருக்கு பெயர் சூட்ட வேண்டுமென்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாயலிலே தான் அது நடைபெற வேண்டுமென்பதை பீட்டர் அவர்கள் இங்கே ஞாபகப்படுத்தியிருக்கிறார். இது உடனடியாக சட்டசபையிலே எழுந்து நின்று உங்கள் ஆலோசனை ஏற்கப்படும் என்று சொன்னதைப் போல சொல்லுகின்ற விஷயமல்ல.
இது வாழ்க்கைப் பிரச்சினை. இரண்டு இனங்கள் ஒன்றுபட்டாலும் இரண்டு மதங்கள் இணைந்தாலும் இரண்டு வகுப்பினர் சேர்ந்தாலும் அங்கே நடைபெறுகின்ற நிகழ்ச்சி ஒரு திருமணமாக இருக்கும்போது வாழ்நாள் எல்லாம் விளங்க வேண்டிய ஒன்று என்ற காரணத்தால் இன்னும் பலரைக் கலந்து கொண்டு, இதற்கு கலப்புத் திருமணம் என்று பெயர் வைக்கலாமா, மனம் இணைந்த திருமணம் என்று சொல்லலாமா, அல்லது மத நல்லிணக்கத் திருமண விழா என்று சொல்லலாமா, அல்லது பொதுவாக எதுவுமில்லாமல் திருமண விழா என்றே சொல்லி விடலாமா என்பதைப் பற்றியெல்லாம் எல்லோரையும் கலந்து பேசி அதற்குப் பிறகு தான் இதைப் பற்றி நான் முடிவு அறிவிக்க முடியுமென்பதை நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்படியும் பாராளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேறுவதற்கு முன்பு இதை நான் அவருக்கும், நாட்டிற்கும் தெரிவிப்பேன் என்றார் கருணாநிதி தனது ஸ்டைலில்.












Click it and Unblock the Notifications