ஸ்ரீரங்கம் வழிபாட்டு முறைகளில் அரசியல் தலையீடு-இந்து மக்கள் கட்சி கண்டனம்
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் வழிபாட்டு முறைகளில் அரசியல் கட்சிகள் தலையிடுவதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் வரும் 24-ம் தேதி பொதுக் கூட்டம் நடைபெறும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புண்ணிய யாத்திரையாக கருதப்படும் சபரிமலை யாத்திரை, திருவண்ணாமலை கிரிவலம் போன்றவைகளுக்கு செல்லும் பக்தர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருவதில்லை.
இதனால் தான் சபரிமலையில் ஏற்பட்ட விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கு சபரிமலை தேவஸ்தானம், கேரள மாநில அரசு ஆகியவை தான் பொறுப்பேற்க வேண்டும்.
வரும் காலத்தில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், பக்தர்களை ஒழுங்குபடுத்தவும் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஸ்ரீரங்கம் கோயில் வழிபாட்டு முறைகளில் அரசியல் கட்சிகள் தலையிடுவதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனவரி 24-ம் தேதி பொதுக் கூட்டம் நடைபெறும்.
பழனியில் தைப்பூசத் திருவிழாவிற்காக 10 லட்சத்துக்கும் அதிமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இவர்களுக்கு குடிநீர், சுகாதார வசதி போன்றவற்றை தமிழக அரசு செய்து தரவில்லை.
திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் கோயிலில் மாசி சிவராத்திரிக்குள் பூஜை முறைகளை ஒழுங்குபடுத்தி, யானை வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை எனில் அங்கு யானையை வைத்து இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து வாக்கு வங்கி துவக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 ஆயிரம் இந்து வாக்குகளைச் சேர்க்கத் திட்டமிட்டு அதற்கான விண்ணப்பங்கள் வீடு, வீடாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications