ஈழத்தில் தமிழர்களைப் போட்டோ எடுத்த தமிழக பெண் வக்கீல் கைது-வைகோ கண்டனம்

உடனடியாக கயலை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கயல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தனது நண்பர் திருமலை என்பவருடன் கடந்த 19ம்தேதி இலங்கைக்கு சுற்றுலா விசா மூலம் அவர் சென்றார். பின்னர் யாழ்ப்பாணம் போய் அங்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை சந்தித்துள்ளார்.
அதன் பின்னர் கயலும், திருமலையும், முள்வேலி முகாமுக்குப் போயுள்ளனர். அங்கு ராணுவத்தின் அனுமதியுடன் முகாமுக்குள் சென்று தமிழர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது புகைப்படம் எடுக்கக் கூடாது என்று சிங்கள ராணுவம் கூறியுள்ளது.
பின்னர் முகாமிலிருந்து இருவரும் வெளியே வந்தபோது கயலின் செல்போனை வாங்கி ராணுவத்தினர் சோதனையிட்டனராம். அதில், முள்வேலி முகாமில் இருந்த தமிழர்களை கயல் புகைப்படம் எடுத்திருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து நிபந்தனையை மீறி புகைப்படம் எடுத்ததாக கூறி இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த செயல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழறிஞரின் பேத்தியை சிங்கள ராணுவம் கைது செய்துள்ளதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கயலையும், திருமலையையும் பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வைகோ கண்டனம்-பிரதமருக்குக் கடிதம்:
கயல் கைதுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கும், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில்,
பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பேத்தியும், தமிழ் அறிஞர் இறைக்குருவனாரின் மகளுமான கயல்விழி, ஜனவரி 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்ற கயல்விழி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்ப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களைச் சந்திப்பதற்காகவும், உரிய ஆவணங்களுடன், இலங்கைக்குச் சென்று இருந்தார். தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், இலங்கை ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது.
தற்போது, அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. கயல்விழியின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சுகிறோம். எனவே, பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, கயல்விழியைப் பாதுகாப்பாகத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்:
கயல்விழி கைதுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் வக்கீல்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.
மதுரை தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பகத்சிங், மனோகரன் தலைமையில் மாவட்ட தலைமை நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் கொடுஞ்செயலை கண்டித்து நடத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டம். மேலும், வழக்கறிஞர் கயல்விழியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications