மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் 10 பேர் சுட்டுக் கொலை
நியூவோ லாரிடோ (மெக்சிகோ): மெக்சிகோ மற்றும் அமெரிக்க நாடுகளின் எல்லைப் பகுதியில், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும், மெக்சிகோ படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் போதைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மெக்சிகோவின் வட கிழக்கு மாகாணமான டமாலிபாஸில் உள்ள, அமெரிக்க எல்லையையொட்டியுள்ள இடத்தில் இந்த சண்டை நடந்தது. வாலி ஹெர்மோசா என்ற இடத்தில் ஆயுதம் தாங்கிய போதைப் பொருள் கும்பலைப் பார்த்த ராணுவத்தினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில், ராக்கெட் லாஞ்சர், 20 கையெறி குண்டுகள், 2 கிரனேட் லாஞ்சர்கள், 24 துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவத்தால் அமெரிக்க எல்லையில் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications