ஜப்பானுடன் தமிழகம் தொழில் ஒப்பந்தம்-குவியப் போகும் ஜப்பானிய முதலீடுகள்
சென்னை: தமிழகத்திற்கும், ஜப்பானுக்கும் இடையே தொழில் விருப்ப ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஏராளமான ஜப்பானிய நிறுவனங்கள் தொழில் முதலீடுகளைச் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பானிய பொருளாதார வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் நிதிக் கழக பிரிவின் இயக்குநர் ஹிதனோபு தெரமுரா மற்றும் தமிழக அரசின் தொழிற்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை வரவேற்று மு.க.ஸ்டாலின் கூறுகையில்,இந்தியாவில் தற்போது 725 ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. அதில் 300 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று இருநாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவாகவும், நல்ல புரிந்து கொள்ளுதலுடனும் உள்ளன. தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு மேலும் மேம்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பொருளாதார சுதந்திரத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னணியில் உள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் விருப்ப மாநிலமாகவும் தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது.
தமிழக மக்களுக்கு உலகத் தரமான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தி்த தருவதில் தமிழக அரசு ஆர்வத்துடன் உள்ளது. இத்துறையில் பெருமளவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் ஜப்பானிய முதலீடுகள் பெருகும். பெருமளவிலான நிறுவனங்கள் இங்கு வரும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது என்றார்.
ஜப்பானின் சர்வதேச துறை இணை அமைச்சர் ஹிடேசி ஒகடா கூறுகையில், சென்னை நகரம் இந்தியாவின் முக்கிய இடத்தில் அமைந்துள்ளதும், இங்கு தொழிளாளர் வளம் சிறப்பாக இருப்பதுமே எங்களை இந்த மாநிலத்திற்கு வரத் தூண்டியது. தமிழகத்திற்கு அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கும் இதுவே முக்கியக் காரணம்.
எண்ணூர் துறைமுகத்திலிருந்து ஜப்பானின் நிஸ்ஸான் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் பெருமளவில் விரைவில் ஏற்றுமதியாகும் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications