தமிழக மீனவர்கள் கைகளில் ஆயுதம் தந்தால்தான் பிரச்சினை தீரும்-நெடுமாறன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1983 ஆம் ஆண்டிலிருந்து 27 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானமீனவர்கள் சிறைப் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
நம்முடைய கடல் எல்லைக்குள்ளாகவே சிங்களக் கடற்படை அத்துமீறி நுழைந்து மீனவர்களைத் தாக்கி வருகிறது. ஆனால் இந்த 27 ஆண்டுகாலத்தில் ஒருமுறைகூட இந்தியக் கடலோரக் காவல் படை சிங்களக் கடற்படையை எதிர்த்துச் சுட்டதில்லை. மீனவர்களைக் காப்பாற்றுவதற்கும் முன் வரவில்லை.
உலகத்தின் ஐந்தாவது பெரிய கடற்படை இந்தியக் கடற்படை எனப் பெருமைப் பேசப்படுகிறது.
பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆப்பிரிக்காவில் இருக்கும் சோமாலியா நாட்டின் கடற்பகுதியில் கடற்கொள்ளைகாரர்களின் அட்டூழியங்களை ஒடுக்குவதற்கு இந்தியக் கடற்படை விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் நமது கடல் பகுதியில் நமது மீனவர்கள் அண்டை நாடு கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க முன்வராமல் இந்தியக் கடற்படை வேடிக்கைப் பார்க்கிறது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதியில் புகுந்து விட்டாலோ, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத்தாண்டி வங்கதேசம், மியான்மர் கடற்பகுதியில் புகுந்துவிட்டாலோ அவர்களை அந்தந்த நாட்டு அரசுகள், கடற்படைகள் சுட்டுக் கொல்வதில்லை.
தமிழக மீனவர்களுக்கு ஆயுதப் பயிற்சிக் கொடுத்து அவர்களுக்கு துப்பாக்கிகளும் வழங்கப்பட்டால் ஒழிய இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேறுவழியில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications