அதிமுக கூட்டணி கட்சிகள் விவரம் இன்னும் 1 வாரத்தில் தெரியும்: தா. பாண்டியன்
வேலூர்: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைத்திருக்கும் என்ற விவரம் இன்னும் ஒரு வார காலத்தில் தெரியும் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்தார்.
அன்மையில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜாவின் தாயார் நாயகம் அம்மாளின் படத்திறப்பு விழா நேற்று வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் நடந்தது.
அதில் கலந்து கொண்டு தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அன்மையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி முதல்வராக இருப்பதைவிட திமுக தலைவராக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது அக்கட்சியில் உள்ள நெருக்கடியையே வெளிப்படுத்துகிறது.
ஒருவர் முதல்வராக நீடிப்பது என்பது தனி மனிதரின் கையில் இல்லை. அது மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
இலவச கலர் டி.வி, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி மற்றும் தற்போது குறைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்களின் விலை ஆகியவையெல்லாம் மக்களின் வரிப் பணத்தில் இருந்து தான் செலவிடப்படுகிறது. அதனால் ஆட்சியாளர்கள் அதைப் பற்றி கவலையும் கொள்ளத் தேவையில்லை, பெருமைப்படவும் தேவையில்லை.
இலவசமெல்லாம் இலவசம் அல்ல. இதற்காக தமிழக தமிழக அரசு ரூ. 91 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை வைத்து தான் இலவசங்கள் வழங்குகிறது. இந்தக் கடன் தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 14 ஆயிரம் கோடி வட்டிக் கட்ட வேண்டியிருக்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை தான் உயரும். இது இலவசமல்ல மக்கள் பெயரில் வாங்கிய கடன்.
வேலூர் மாவட்டத்தில் அன்றாடம் மணல் கொள்ளை நடக்கிறது. அடுத்த மாதம் 1-ம் தேதி வரை அரசு குவாரிகளில் மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு வாதாடி வருகின்றது. எங்கள் கம்யுனிஸ்டு கட்சி மணல் அள்ளக்கூடாது என்று சொல்லவில்லை. விதிப்படி மணல் அள்ள வேண்டும் என்று தான் கூறுகின்றது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிகள், அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் இருக்கும் என்ற விவரம் இன்னும் ஒரு வாரத்தில் தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications