இலங்கையால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ஜெ. ஆறுதல்-குழ்நதைகளின் படிப்புச் செலவை ஏற்றார்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
வேதாரண்யம்: சமீபத்தில் இலங்கை கடற்படைக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. மேலும், ஜெயக்குமாரின் குழந்தைகளின் படிப்புச் செலவையும் அதிமுக ஏற்கும் என்று அவர் அறிவித்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் சமீபத்தில் இலங்கை கடற்படைக் கும்பலால் கொடூரமாக கழுத்தை இறுக்கிக் கொல்லப்பட்டார்.

இலங்கைப் படையினரின் இந்த வெறிச் செயல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று ஜெயக்குமாரின் ஊருக்கு ஜெயலலிதா வருகை தந்தார்.

ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ரூ. 1 லட்சம் நிதியையும் அவர் அளித்தார். மேலும், ஜெயக்குமார் குழந்தைகளின் படிப்புச் செலவையும் அதிமுகவே ஏற்கும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்திய அரசு முதுகெலும்பு இல்லாமல் இருப்பதால்தான் இலங்கை கடற்படை மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இலங்கை கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சத்தீவை மீட்பதுதான் இதற்கு தீர்வு. கச்சத்தீவை மீட்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றார் ஜெயலலிதா.

மீனவர் மீதான தாக்குதலைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருவதைக் கண்டித்து வருகிற 28ம் தேதி அதிமுக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 3 என்ற அளவில் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்திற்குள் பெட்ரோலின் விலை ரூ. 2.55 என்ற அளவிற்கு ஜனவரி மாதம் 14-ஆம் தேதியன்று மீண்டும் உயர்த்தப்பட்டது. அதாவது ஒரே மாதத்தில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 5.55 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் பொதுமக்களும், ஆட்டோவில் செல்லும் சாதாரண மக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டிய மத்திய அரசு, பெட்ரோல் விலை உயர்வின் மூலம் விலைவாசி உயர்விற்கு வழி வகுத்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்சினை தான் இப்படி இருக்கிறது என்றால், அண்டை நாடுகளுடனான பிரச்னை இதைவிட மோசமாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், அவர்களுடைய உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் அன்றாட செய்திகளாக ஆகிவிட்டன.

பத்து நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பாண்டியன் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கைக் கடற்படையினரால் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு இழுத்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்.

இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டிய மத்திய அரசு இந்தப் பிரச்சினையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மத்திய அரசும், தி.மு.க. அரசும் மக்கள் விரோத அரசுகளாக விளங்குகின்றன.

எனவே, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதற்குக் காரணமான, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தட்டிக் கேட்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில், 28.1.2011 வெள்ளிக் கிழமை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+