நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்: இன்று ஆறுமுகநேரி கும்பாபிஷேகத்தில் பங்கேற்பு
நெல்லை: நெல்லையப்பர் கோவலிலில் முதல்வர் கருணாநிதி துணைவியர் ராஜாத்தியம்மாள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இன்று நடக்கும் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் நேற்று மாலை நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தார். கோயில் வாசலில் கலெக்டர் ஜெயராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் அமைச்சர் பூங்கோதை வந்திருந்தார். மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், எம்எல்ஏ மாலை ராஜா, கோயி்ல் அறங்காவலர் குழு தலைவர் திருநாவுக்கரசு, அறங்காவலர்கள் செல்லையா, தெய்வ பகவதி உள்பட பலர் உடனிருந்தனர்.
கோயிலில் அம்மன் சன்னதிக்கு சென்ற ராஜாத்தியம்மாள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் அவர் சாமி சன்னதி சென்று வழிபட்டார். கோயில் தல வரலாறு குறித்து அறங்காவலர் செல்லையா ராஜாத்தியம்மாளிடம் விளக்கினார்.
சுமார் அரை மணி நேரத்துக்கு பின் ராஜாத்தியம்மாள், அமைச்சர் பூங்கோதை, திமுகவினர் கோயிலில் இருந்து வெளியே வந்து காரில் ஏறி புறப்பட்டனர். நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் சாமி தரிசனம் செய்தபோது பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
கோயில் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து படம் எடுக்க சென்ற டிவி, பத்திரிக்கை நிருபர்களை திமுகவினர் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.
ராஜாத்தியம்மாள் கோயிலில் இருந்து வெளியே வந்தபோது ரோட்டில் நின்று படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை, டிவி கேமராமேன்களிடம் திமுகவினர் தகராறு செய்தனர். தென்காசி எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட சிலர் பத்திரிக்கையாளர்களை திட்டினர். இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் பத்திரிக்கை நிருபர்கள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications