அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட எம்.எல்.ஏ சேகர் பாபு திமுகவில் சேருகிறார்?

உண்மையில் குடியரசு தினமான நேற்றே அவர் திமுகவில் சேர்ந்திருப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நேற்று திட்டமிட்டபடி அவர் சேரவில்லை. ஆனால் அவர் திமுகவில் சேருவது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பதாகவும், முக்கியப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சென்னை ஆர் கே நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளுள் ஒருவராக இருந்தார். கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். வட சென்னை மாவட்ட அ.தி. மு.க. செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். தமிழகத்திலேயே அதிகமான பொதுக் கூட்டங்கள் நடத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
ஜெயலலிதா எள் என்றால் எண்ணெய் ஆக இருப்பார் சேகர்பாபு. இவரது உறவினர்தான் அதிமுக அவைத் தலைவரான மதுசூதனன். இவரை வைத்து ஜெயலலிதாவின் நெருக்கமான வளையத்திற்குள் நுழைந்து வட சென்னை அதிமுகவை ஆட்டிப்படைத்து வந்தார் சேகர்பாபு.
தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதில் தீவிரமாக இருந்தார். 2006 மாநகராட்சி தேர்தலின்போது திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கட்சித் தலைமை சமீபத்தில் திடீரென நீக்கியது. அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு வட சென்னை மாவட்ட பொறுப்புகளில் இருந்த சேகர்பாபு ஆதரவு நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். நிர்வாகிகள் தொடர்ந்து மாற்றப்படுவதை எதிர்த்து வட சென்னை அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா வீட்டில் முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து சேகர்பாபு தி.மு.க.வில் சேரப் போவதாக செய்திகள் பரவியுள்ளன. தி.மு.க.வின் முக்கிய தலைவருடன் இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிகிறது.
பொதுவாக சென்னையில் அதிமுகவுக்கு பெரிய அளவு வெற்றி கிடைக்காது என்ற நிலையை மாற்றியவர்களுள் சேகர் பாபுவும் ஒருவர். கடந்த சட்டசபைத் தேர்தலில் சென்னையில் அதிமுக அதிக தொகுதிகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
பீல்டில் இறங்கி கடுமையாக உழைப்பவர் என்ற பெயரைப் பெற்றவர் சேகர்பாபு. எனவே இப்படிப்பட்டவர், கட்சியை விட்டு விலகுவது அ.தி.மு.க.வினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலகல் குறித்து சேகர்பாபுவிடம் கேட்டால், நான் நம்பி இருந்த தலைமை என் மீது நம்பிக்கை இழந்து விட்டது. நான் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு சிலர் என் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதில் குறியாக உள்ளனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் அரசியலில் இப்படியே இருப்பதிலும் அர்த்தமில்லை. எனவே விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்," என்று தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைந்தால் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபு போட்டியிட சீட் தரப்படும் என்று தெரிகிறது. மேலும் வட சென்னையில் அதிமுக வேட்பாளர்களை காலி செய்யும் மிகப் பெரிய பணியும் அவரிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அதிமுகவிலிருந்து பெரிய தலைகள் எதுவும் விலகி திமுகவுக்குப் போகவில்லை. ஜெயலலிதாவின் தொடர் கூட்டங்களால் அதிமுகவிலிருந்து விலகுவோரின் எண்ணிக்கை சுத்தமாக நின்று போயிருந்தது. இந்த நிலையில் சேகர்பாபு மீண்டும் இந்த விலகல் படலத்தைத் தொடங்கி வைக்கப் போவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications