புதிய கார்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த டெல்லி மாநகராட்சி முடிவு
டெல்லி: பார்க்கிங் கட்டண உயர்த்த டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளதால்,புதிய கார்கள் மற்றும் வாகனங்கள் வாங்கும்போது கூடுதல் தொகை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் புதிதாக வாகனங்களை வாங்கி பதிவு செய்யும்போது, மாநகராட்சி சார்பில் இரவு நேர பார்க்கிங் கட்டணமும் கூடுதலாக சேர்த்து வசூலிக்கப்படுகிறது. வாகன வகைகளுக்கு தக்கவாறு இந்த பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இரவு நேர பார்க்கிங் கட்டணத்தை டெல்லி மாநகராட்சி இருமடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால்,புதிய வாகனங்கள் வாங்கும்போது கூடுதல் தொகை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டெல்லியில் வாகனங்கள் பெருகி வருவதையடுத்து பார்க்கிங் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அவசியமாகியுள்ளது. டெல்லியில் பல்வேறு பகுதிகளில் 40 பார்க்கிங் லாட்டுகளை மாநகராட்சி கட்டி வருகிறது. இதில்,15 பார்க்கிங் பகுதிகள் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் வசதி கொண்டதாகும்.
பார்க்கிங் லாட்டுகளை கட்டுவதற்கான கட்டுமான செலவீனங்கள் கடுமையாக உயர்ந்து விட்டதால், பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,மாநகராட்சியின் செலவீனங்கள் அதிகரித்துவிட்டதால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது.
ரூ.4லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் 4,000 ரூபாயாக இருந்த இரவு நேர பார்க்கிங் கட்டணம் 12,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சொகுசு கார்களுக்கு இதுவரை இரவு நேர பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படவி்ல்லை. ஆனால், இனிமேல் ரூ.10 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட சொகுசு கார்களுக்கு இரவு நேர பார்க்கிங் கட்டணம் 20,000 ரூபாயாக வசூலிக்கப்படும்.
டெம்போ, லாரிகள் மற்றும் தனியார் பஸ்களுக்கு 4,000 முதல் 8,000 ரூபாயும், ஆல் இந்தியா பர்மிட் கொண்ட கார்கள் மற்றும் கால் டாக்சிகளுக்கு 10000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த தொகை செலவிடப்படும் என்று கூறினார்.
பார்க்கிங் கட்டணத்தை டெல்லி மாநகராட்சி உயர்த்த முடிவு செய்துள்ளதால், புதிய கார் வாங்கும்போது 10,000ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications