சுப்ரீம் கோர்ட்டால் மத்திய அரசுக்கு நெருக்கடி-பி.ஜே.தாமஸ் பதவி விலக முடிவு?
டெல்லி: ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து தாமஸை பதவியிலிருந்து விலகுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அவராக விலகாவிட்டால் விலகியே ஆக வேண்டும் என மத்திய அரசு நிர்ப்பந்திக்கும் என்று தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் தொடர் கண்டனத்தால், மத்திய அரசுக்கும், காங்கிரஸுக்கும் பெரும் தர்மசங்கடம் மற்றும் நெருக்குதல் அதிகரித்திருப்பதால், தாமஸே பதவி விலகி விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று உச்சநீதிமன்றத்தில் தாமஸின் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தால், மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு விட்டது.
அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டிதான் தாமஸ் நியமனத்தை முடிவு செய்தது. ஆனால் அந்தக் கமிட்டி முன்பு, தாமஸ் மீதான ஊழல் வழக்கு குறித்த தகவல்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே அதுகுறித்து அரசுக்குத் தெரியாமல் போய் விட்டது.
மேலும், தாமஸ் சமர்ப்பித்த பயோடேட்டாவிலும் இதுகுறித்து எந்தத் தகவலும் இடம் பெறவில்லை என்று கூறினார்.
இது மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. காரணம், தாமஸ் மீதான வழக்கு கடந்த 20 வருடங்களாக நிலுவையில் உள்ளது என்பபது குறிப்பிடத்தக்கது. மேலும் தாமஸ் மீதான வழக்கு விவரத்தை நான் பிரதமரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜும் அமபலப்படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அந்த வழக்கு குறித்த விவரமே மத்திய அரசுக்குத் தெரியாது என்று கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாஹன்வதி தான் உச்சநீதிமன்றத்தில் அப்படிக் கூறவில்லை என்று மறுத்துப் பேசினார். அவர் கூறுகையில், பிரதமர் தலைமையிலான கமிட்டிக்கு இந்த விவரம் தெரியாது, அதுகுறித்து கூட்டத்தில் பேசப்படவில்லை என்று நான் கூறவில்லை என்றார்.
ஆனால் தாமஸ் மீதான வழக்கு குறித்த முழு விவரத்தையும் பிரதமர் தலைமையிலான கமிட்டி முன்பு தாங்கள் சமர்ப்பித்ததாக பாஜக கூறியுள்ளது. சுஷ்மா சுவராஜும், இந்தக் கமிட்டியில் ஒரு உறுப்பினராக இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாமஸ் மீதான வழக்கை பிரதமர் தலைமையிலான குழுவிடம் சுஷ்மா சுவராஜ் சுட்டிக் காட்டினார். ஆனால் அதுதொடர்பாக கமிட்டி பரிசீலிக்க முன்வராததால், கமிட்டிக் கூட்டத்திலிருந்து சுஷ்மா வெளிநடப்புச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பச்சைப் பொய்-சுஷ்மா கண்டனம்
நேற்று வாஹன்வதி சுப்ரீம் கோர்ட்டில் கூறியது குறித்து சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் உண்மைகளை விளக்கி உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யவுள்ளேன்.
உண்மையில் கமிட்டிக் கூட்டத்தில் நான்தான் பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும், தாமஸ் மீதான ஊழல் வழக்கு குறித்து தெளிவாக எடுத்துரைத்தேன். அவர் மீது பாமாயில் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவசரப்பட்டு முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். நாம் காத்திருக்கலாம் என்று கூறினேன்.
ஆனால் மத்திய அரசு அதைப் புறக்கணித்து விட்டு அவசர கதியில் தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக தேர்வு செய்தது. இதுதான் உண்மை. எனவே, மத்திய அரசுக்கோ, பிரதமருக்கோ தாமஸ் மீதான வழக்கு குறித்து தெரியாது என்று கூறுவது அப்பட்டமான பொய். மன்மோகன் சிங்கை அம்பலப்படுத்துவே இந்த வழக்கில் நான் தலையிடுகிறேன் என்றார் சுஷ்மா.
இப்படி அடுத்தடுத்து நெருக்குதல் முற்றியுள்ளதால் மத்திய அரசு பதட்டமடைந்துள்ளது. தாமஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கலாம் என மத்திய அரசு சந்தேகப்படுகிறது. மேலும், தாமஸ் நீக்கத்தை ரத்து செய்து உத்தரவிடவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்படி நடந்தால் அது அரசுக்குப் பெரும் கெட்ட பெயராக அமைந்து விடும் என்பதால் தாமஸ், அவராகவே பதவி விலக வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இந்த முடிவு தாமஸுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சந்தித்துப் பேசினார். அப்போது இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தாமஸை நீக்குவது சுலபமான காரியம் இல்லை. குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலம்தான் அவரை நீக்க முடியும் என்பதால் தாமஸ் விலகாவிட்டால் வற்புறுத்தி விலக வைப்பது, அப்படியும் விலக மறுத்தால் குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் அவரை விலக்குவது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் கூட்டமும் இன்று டெல்லியில் கூட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications