கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார் சேகர்பாபு எம்எல்ஏ!

சென்னை ஆர் கே நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு. வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்து வந்தார்.
அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் ஜெயலலிதா நீக்கினார். சேகர்பாபு ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதோடு சேகர்பாபுவும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர்.
எந்த நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் அழைக்கப்பட வில்லை. இதைத் தொடர்ந்து சேகர்பாபு எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு அவர் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது தாய் கழகத்தில் சேரும் சேகர் பாபுவை வரவேற்பதாக மு.க. ஸ்டாலின் கூறினார்.
இன்று காலை முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்த சேகர்பாபு, கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி தி.மு.க.வில் சேர்ந்தார். அவருடன் முக்கிய நிர்வாகிகளும் சென்று தி.மு.க.வில் சேர்ந்தனர்.
"இப்போதுதான் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து நிற்பதாய் உணர்கிறேன். முதல்வர் மற்றும் துணை முதல்வரின் அன்புக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்", என்றார் சேகர் பாபு.












Click it and Unblock the Notifications