ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்கு!

இலங்கை ராணுவத்தினரின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களால் தங்களது உறவினர்கள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்கள் வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராஜபக்சே கைது செய்யப்பட வேண்டும் என்றும், தங்களுக்கு நஷ்ட ஈடாக 30 மில்லியன் டாலர்களை அவரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்றும் அந்த வழக்கின் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் சட்டத்தின்படி போர்க்குற்றம், மனித உரிமை மீறல், படுகொலை ஆகியவற்றில் தொடர்புடைய நபர்கள் அந் நாட்டுக்கு வந்தால் அவர்களை கைது செய்ய அமெரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா வந்த ராஜபக்சே பிப்ரவரி 3-ம் தேதி தான் நாடு திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தன் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ள தகவல் அறிந்து அவசரமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜயசேகர, "இந்த வழக்கு வெறும் ஊடகப் பரபரப்புதான். பணம் கறக்கும் முயற்சி. இதற்கு நாங்கள் பணிய மாட்டோம்", என்றார்.












Click it and Unblock the Notifications