மு.க.அழகிரி மணி விழா-ஸ்டாலின் மதுரை சென்று வாழ்த்து
மதுரை: இன்று மணி விழா கொண்டாடும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, நேற்றே அவரது வீடு சென்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
மு.க.அழகிரிக்கு இன்று 60வது பிறந்த நாளாகும். இதையொட்டி தனது நட்சத்திர பிறந்த நாளான கடந்த வியாழக்கிழமையன்றே முதல்வர் கருணாநிதியிடம், அழகிரி தனது மனைவியுடன் சென்று வாழ்த்து பெற்றார். முதல்வர் வீட்டிலேயே மணி விழாவும் எளிமையாக நடந்தது.
இந்த நிலையில் நேற்று மதுரை சென்றார் துணை முதல்வரும் அழகிரியின் தம்பியுமான மு.க.ஸ்டாலின். அவருடன் சகோதரி செல்வியும் வந்திருந்தார். இருவரும் சத்யசாய் நகரில் உள்ள அழகிரி வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர்களை அழகிரி, அவருடைய மனைவி காந்தி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அழகிரி, ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்தார். சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஸ்டாலினும், செல்வியும் அழகிரி வீட்டில் மதிய உணவு அருந்தினர். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்பினார் ஸ்டாலின்.
தனது மதுரை பயணம் குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், அண்ணனின் மணி விழாவையொட்டி முன்கூட்டியே வாழ்த்து சொல்ல வந்தேன் என்றார்.
இன்று தனது பிறந்த நாளன்று தான் மதுரையில் இருக்க மாட்டேன் என்று அழகிரி ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் அவரது தொண்டர்களும், திமுகவினரும் மதுரை நகரில் ஏராளமான நல உதவிகளை வழங்கியும், கோவில்களில் அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்கியும் பிறந்த நாளை வழக்கம் போல கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications