தொகுதிப் பங்கீடு-தா.பாண்டியன் தலைமையிலான குழு அதிமுகவுடன் பேச்சு
சென்னை: சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக குழுவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சட்டசபைத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக தீவிரமாக உள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அடங்கிய மூவர் குழு நேற்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.
முதல் கட்சியாக சிபிஎம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. சிபிஎம் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
தங்களுக்கு எத்தனை இடங்கள் தேவை என்ற பட்டியலை அப்போது அதிமுகவிடம் சிபிஎம் கொடுத்ததாக தெரிகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன்,
இரு கட்சிகளிடையே சட்டசபைத் தேர்தல் தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இன்று நடந்த ஆலோசனையில் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது குறித்த யூகங்கள் குறித்து விவாதித்தோம்.
எத்தனை இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றார்.
சிபிஎம் தரப்பில் 25 தொகுதிகள் வரை கோரி பட்டியல் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதிகபட்சம் 15 தொகுதிகள் வரை அக்கட்சிக்குக் கிடைக்கலாம் என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இக்கட்சிக்கு 13 சீட்கள் ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஎம்முடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், கட்சிப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி, பேச்சுவார்த்தை குறித்து இறுதி முடிவை விரைவில் அறிவிப்பார் என்றார்.
இதன் தொடர்ச்சியாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக குழு ஆலோசனை நடத்தியது.
சிபிஐ குழுவுக்கு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார். குழுவில் தா.பாண்டியன் தவிர, சி.மகேந்திரன், பழனிச்சாமி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது எத்தனை தொகுதிகள் தேவை என்பது குறித்து சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
சிபிஎம்மைப் போலவே சிபிஐயும் 25 தொகுதிகள் வரை கேட்பதாக தெரிகிறது.
அடுத்து மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இன்னும் 2 வாரத்திற்குள் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்து விட்டு, யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications