சீனாவுடன் ரகசியத் தொடர்பு-திபெத்திய தலைவர் கர்மபா, உதவியாளரிடம் விசாரணை
சிம்லா: ரூ. 8.5 கோடி பணம் சிக்கியது மற்றும் சீனத் தொடர்புகள் குறித்து திபெத்திய தலைவர் கர்மபா மற்றும் அவரது உதவியாளரிடம் ஐபி அதிகாரிகள் நேற்று கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர்.
திபெத்திய தலைவர்களில் 2வது இடத்தில் இருப்பவர் 17வது கர்மபா எனப்படும் உக்யான் திரின்லே டோர்ஜி. இவரது அலுவலகத்தில் சமீபத்தில் ரூ. 8.5 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. சீனப் பணமும் இருந்ததால், அவருக்கு சீனாவுடன் ரகசியத் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன. தலாய் லாமாவுக்கு அடுத்த முக்கியமான தலைவர் இந்த கர்மபா என்பதால் பரரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இமாச்சலப் பிரதேசம், தர்மசாலா அருகே சித்பரி என்ற இடத்தில் உள்ள கர்மபாவின் ஆசிரமத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. நேற்று 3வது நாளாக ரெய்டு தொடர்ந்தது.
இங்கு மட்டுமல்லாமல் கர்மபாவின் தலைமையில் இயங்கி வரும் அறக்கட்டளை அலுவலகத்திலும் ரெய்டுகள் நடந்துள்ளன. மேலும், நேற்று கர்மபாவிடம் இமாச்சலப் பிரதேச போலீஸாரின் உதவியுடன், ஐபி அதிகாரிகள் விசாரணைநடத்தினர். சித்பரி ஆசிரமத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது.
இதேபோல கர்மபாவின் செயலாளரான கோம்பா செரிங்கும் போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை, உண்மை இல்லை. தனக்கும் சீனாவுக்கும் எந்த ரகசியத் தொடர்பும் இல்லை என்றும், அந்தப் பணம் நன்கொடையாக வந்த பணம் என்றும் கர்மபா மறுத்துள்ளார்.
அவருக்கு தலாய் லாமாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலாய் கூறுகையில், அந்தப் பணம் நன்கொடையாக வந்த பணமாக இருக்கலாம். ஆனால் அது கர்மபாவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. கர்மபா அனைவராலும் மதிக்கப்படும் ஒரு துறவி ஆவார். அவர் மீதான சர்ச்சை துரதிர்ஷ்வடவசமானது என்றார்.
இதற்கிடையே கர்மபா கைது செய்யப்பட மாட்டார் என்று டெல்லித் தகவல்கள் கூறுகின்றன. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கர்மபா ஒரு சீன உளவாளியாக இருக்கலாம் என்று ஐபி அதிகாரிகள் தொடர்ந்து சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரம் பிப்ரவரி 1ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள உள் நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாட்டிலும் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து இமாச்சல் பிரதேச முதல்வர் பிரேம் குமார் துமால் கூறுகையில், கர்மபாவின் அலுவலகம் சீனாவுடன் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்றுகூறியுள்ள போதிலும், விஷயம் அசாதாரணமானது. எனவே தீவிர விசாரணை தொடர்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications