எகிப்திலிருந்து 300 இந்தியர்களுடன் முதல் ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தது

எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாலும், தலைநகர் கெய்ரோ தொடர்ந்து பதட்டமாக இருப்பதாலும் அங்கிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள் விருப்பம் தெரிவிக்கலாம் என இந்தியத் தூதரகம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து ஏராளமான இந்தியர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் இவர்களை அழைத்து வரத் திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் சிறப்பு விமானம் கெய்ரோ விரைந்தது. இந்த விமானத்தில் 300 இந்தியர்கள் இன்று பிற்பகல் மும்பை வந்து சேர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இதுகுறித்து ஏர் இந்தியா பிராந்திய மேலாளர் அபய் பதக் கூறுகையில், 423 பேர் வரை இந்த விமானத்தில் பயணிக்க முடியும். ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு இந்த விமானம் கெய்ரோவிலிருந்து கிளம்பியது. இன்று பிற்பகல் மும்பையை வந்தடைந்தது.
இன்னொரு சிறப்பு விமானாத்தில் டாடா குழுமத்தைச் சேர்ந்த 300 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியா வரக் காத்துள்ளனர். அந்த விமானம் இன்று இரவு கெய்ரோவிலிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
தேவைப்பட்டால் மேலும் சில விமானங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்தியர்களுக்கும், அவர்களது சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கூடுதல் விமானங்களை இயக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
கடந்த 1990ம் ஆண்டு வளைகுடாப் போர் வெடித்தபோது ஏர் இந்தியா நிறுவனம் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை வளைகுடா நாடுகளிலிருந்து ஜோர்டான் வழியாக மீட்டு கொண்டு வந்தது என்பது நினைவிருக்கலாம். இது ஒரு மிகப் பெரிய மீட்புப் பணி என்பதும், வரலாற்றுச் சாதனை என்பதும் குறிப்பிடத்த்கது.
எகிப்தில் 3600 இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 2200 பேர் கெய்ரோவில் உள்ளனர். அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதற்கிடையே, நேற்று கெய்ரோவில் விமானப் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டதாலும், தலைநகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதாலும், விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான இந்திய பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications