அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பிப் 1ல் புதிய சம்பளம்: ஆண்டுதோறும் 3 சதவிகித உயர்வு

தமிழகத்தில் 8 போக்குவரத்து கழக கோட்டங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையடுத்து மீண்டும் ஊதியம் உயர்த்தப்பட்டது. இதையும் சில சங்கங்கள் ஏற்றுக் கொள்ளாமல் கடந்த 27-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தன. புதிய ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.582 கோடி கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது. இந்த தொகையை போக்குவரத்து கழகங்களுக்கு அரசு வழங்கியுள்ளதால் பிப்ரவரி 1-ம் தேதி புதிய சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து நெல்லை அரசு போக்குவரத்துக் கழக தொமுச பொதுச் செயலாளர் தர்மன் கூறுகையில்,
புதிதாக பணிக்கு சேர்ந்த டிரைவர்களுக்கு ரூ.2414ம், 13 வருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ.3983ம், 29 வருடம் பணி புரிந்தவர்களுக்கு ரூ.4162ம் வழங்கப்படுகிறது. இதேபோல் புதிதாக பணிக்கு சேர்ந்த கண்டக்டர்களுக்கு ரூ.2251ம், 13 வருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ.3281ம், 21 வருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ.3756ம், 29 வருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ.3863ம் வழங்கப்படும்.
தொழிற்பிரிவில் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ரூ.2368ம், 13 வருடம் பணி புரிந்தவர்களுக்கு ரூ.3721ம், 29 வருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ.3863ம் வழங்கப்படும். இது தவிர 3 சதவீதம் ஆண்டுதோறும் உயர்த்தப்படும். அதோடு அரசு ஊழியர்களுக்கு அகல விலைப்படி உயர்த்தப்படும்போது போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் உயர்த்தப்படும்.












Click it and Unblock the Notifications