சென்னையில் 26-வது இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி!

இந்திய வர்த்தக மேம்பாட்டுக் கழகம் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி குழு சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 26-வது இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், மத்திய குறு- சிறு- நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் வீரபத்ர சிங் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் 70 சதவீதம் தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களாக உள்ளன. மொத்த தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொத்த ஏற்றுமதியில் தோல் பொருட்கள் ஏற்றுமதி 40 சதவீதம் ஆகும். இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதால் இந்தத் தொழிலை மத்திய அரசு அங்கீகரித்து, அதன் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது'' என்று தெரிவித்தார்.
உலகளவில் முன்னிலை:
மத்திய நீர் ஆதாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பேசுகையில், "தோல் தயாரிப்பு நிறுவனங்களைப் பொருத்தவரை, போதிய அளவுக்கு தோல், அதை பொருட்களாக தயாரிப்பதற்கு தேவையான வசதிகள் நம்மிடமே உள்ளன. நம்மிடம் உள்ள வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தினால் தோல் பொருட்கள் தயாரிப்பில் உலகளவில் முன்னிலை வகிக்க முடியும்'' என்றார்.
400 அரங்குகளுடன் அமைந்துள்ள இந்த கண்காட்சியில், உலகத் தரம் வாய்ந்த பினிஷ்டு லெதர், செருப்பு தயாரிப்பிற்கான பொருட்கள், செருப்புகள், தோல் ஆடைகள், பெல்ட்டுகள், உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
வரும் 3-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.












Click it and Unblock the Notifications