ஜூனுக்குப் பிறகு 25 பைசா ஒழிப்பு!
மும்பை: வரும் ஜூன் மாதத்துக்குப் பிறகு 25 பைசா நாணயங்களை முற்றாக ஒழிக்கிறது ரிசர்வ் வங்கி.
அந்தக் காலத்தில் நாலணா எனப்பட்ட காசுதான், விடுதலைக்குப் பிந்தைய ஆண்டுகளில் 25 காசாக மாறியது.
எண்பதுகளின் பிற்பகுதி வரை நாலனாவுக்கு மரியாதை இருந்தது. நாலனாவுக்கு பஸ்ஸில் பயணித்த காலம், படம் பார்த்த காலமெல்லாம் உண்டு.
நாளடையில் நாலனா என்பதற்கே மதிப்பில்லாமல் போய்விட்டது. இந்த காசுக்கு ஒரு மிட்டாய் கூட கிடைக்காது என்றாகிவிட்டது, உயர்ந்து வரும் விலைவாசியும் பணவீக்கமும்.
இப்போதே கிராமப்புறங்களில் 25 காசை யாரும் வாங்க மறுக்கிறார்கள். பிச்சைக்காரர்கள் கூட 25 காசை வீசி எறியும் நிலை.
இப்படி மதிப்பில்லாத நாணயத்தை இனியும் புழக்கத்தில் வைத்திருப்பது கஜானாவுக்கு வீண் செலவு என்பதால் இந்த நாணயத்தை முற்றாக ஒழிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள 45 அரசு சார்பான வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சில்லறை காசுகள் பரிமாற்றத்துக்கான தனி பிரிவை திறந்து வைக்குமாறும், பொதுமக்களிடமுள்ள 25 காசுகளை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு 25 காசு புழக்கத்தில் இருக்காது என்பதால், அதற்குள் தங்களிடம் உள்ள 25 காசுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
25 காசுகளைத் தொடர்ந்து 50 காசு நாணயங்களையும் விலக்கிக் கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications