தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் சொத்து கணக்கை வெளியிட முடிவு: அத்வானி
டெல்லி: நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கறுப்புப் பணத்தை ஒழிக்க வலியுறுத்தி, பாஜக கட்சி கூட்டணியில் உள்ள முதல்வர்கள், முக்கியத் தலைவர்கள் என அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கை பகிரங்கமாக வெளியிடுவார்கள் என்று அத்வானி தெரிவித்தார்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பு குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் இல்லத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அத்வானி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை எல்லாம் இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை வளர்ச்சிப் பணிக்காக பயன்படுத்த வேண்டும் என்று பாஜக தீர்க்கமாக உள்ளது. இதற்கென சிறப்பு பிரிவையும் கட்சி சார்பில் அமைக்கவிருக்கிறோம்.
பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முதல்வர்கள், முக்கியத் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். நமது கூட்டணியில் உள்ளவர்கள் யாரிடமும் கறுப்பு பணம் இல்லை என்பதை அரசுக்கு நிரூபிக்கத் தான் இந்த முடிவு.
அரசியல்வாதிகளில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஊழல்வாதிகள் என்ற மோசமான எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.
கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது பயங்கரவாதிகள் மீது தொடரப்படும் சட்டப்பிரிவுகளில் வழக்கு தொடர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications