திமுகவிடம் 78 சீட் கேட்க காங்கிரஸ் முடிவு-குலாம் நபி ஆசாத்துடன் சோனியா ஆலோசனை

திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசி விட்டு வந்துள்ளார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிகைகளில் சோனியா இறங்கியுள்ளார். நேற்று குலாம் நபி ஆசாத்தை தனது வீட்டுக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார் சோனியா காந்தி. இந்த சந்திப்பின்போது திமுகவிடம் கேட்கப்பட வேண்டிய சீட்கள் விவரம், பேச்சுவார்த்தைக்கான குழு அமைப்பது, அதில்யார் யாரை இடம் பெறச் செய்வது என்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து குலாம் நபி ஆசாத் கூறுகையில்,தேர்தல் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கி விடும் என்று தெரிகிறது. நமக்கு கால அவகாசம் குறைவாகவே உள்ளது. எனவே அனைத்துப் பணிகளையும் விரைவாக செய்து முடிக்க வேண்டிய நிலை. திமுக தனது குழுவை அமைத்த பின்னர் நாங்களும் எங்களது குழுவை அறிவித்து உடனடியாக பேச்சுக்களைத் தொடங்கி விடுவோம் என்றார்.
கடந்த முறை தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட குழுவில் மத்திய அமைச்சர்களும், தமிழக காங்கிரஸின் இரு பெரும் கோஷ்டித் தலைவர்களுமான ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முறை மேலும் சில கோஷ்டித் தலைவர்களுக்கு குழுவில் இடம் கொடுக்கப்படவுள்ளதாம்.
78 சீட் கேட்கத் திட்டம்:
இதற்கிடையே திமுகவிடம் 78 சீட்களைக் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதை ஆசாத்தே தெரிவித்துள்ளார். இதில் குறைப்பு என்ற பேச்சுக்கே அனேகமாக இடமிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சி 83 தொகுதிகளைக் கேட்கத் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
இந்த சீட்களைத் தர திமுக முன்வந்தால் ஆட்சியில் பங்கு கேட்கும் கோரிக்கையைக் கைவிட காங்கிரஸ் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications