எதியூரப்பா ஊழல்களை மறைத்துவிட்டு எங்களுக்கு கண்டனமா?: பாஜகவுக்கு திமுக கேள்வி
சென்னை: கர்நாடகத்தில் பாஜக அரசும், முதல்வர் பதவியும் எத்தகைய மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பதை மறைத்துவிட்டு, திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்ட பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு திமுக பொதுக் குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இன்று நடந்த திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பாஜகவின் தலைவர் நிதின் கட்காரி, சமீபத்தில் சென்னையில் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்கள் திட்டமிட்டு திமுக மீதும், திமுக அரசு மீது பரப்பப்பட்ட பொய்ச் செய்தி.
அண்டை மாநிலமான கர்நாடகத்தில் அவரது கட்சியைச் சார்ந்த அரசும், முதலமைச்சர் பதவியும் எத்தகைய மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பதை மறைத்துவிட்டு திமுகவுக்கும், திமுக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்ட நிதின் கட்காரிக்கு இந்தப் பொதுக் குழு கண்டனம் தெரிவிக்கிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்திருப்பதற்கும், வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசிடம் உத்தரவாதம் பெற்று வந்தததற்கும் முதல்வர் கருணாநிதிககு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இந்தியநாடு முழுமையும் ஏற்பட்டுவிட்ட விலைவாசி உயர்வு, தமிழ்நாட்டிலும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. அந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. காய்கறிகளை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, புதிதாகத் திறக்கப்பட்டுள்ள விற்பனை மையங்கள் மூலம் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
மேலும் நெல், பயறு வகைகள் உற்பத்தியை அதிகப்படுத்துவற்கான நீண்டகாலத் திட்டமும் செயல்படத் தொடங்கியிருக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள உழவர் சந்தைகளை, மேலும் விரிவாக்கவும் புதிய உழவர் சந்தைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவந்த, தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களை இப்பொதுக் குழு நன்றியுடன் பாராட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications