ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதிக்கும் தொடர்புண்டு-சாமி வாதம்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் கருணாநிதிக்கும் இதில் தொடர்புள்ளது. எனவே எனது தனி வழக்கை டெல்லி கோர்ட் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தனியாக சாமியும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தன்னை அரசுத் தரப்பில் வக்கீலாக கருதி சேர்க்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்த மனுவை விசாரித்து வரும் நீதிமன்றம் இன்று சாமியிடம் சில கேள்விகளைக் கேட்டது. இதுகுறித்து நீதிபதி பிரதீப் சத்தா கேட்கையில், ஸ்பெக்ட்ரம் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ராசாவும் கைது செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வழக்கின் அவசியம் என்ன என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சாமி, இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. மேலும், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இதில் தொடர்பு உள்ளது. எனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். எனது மனுவை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டார்.
வழக்கு விசாரணை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications