ஜெ. தங்களது தொகுதியில் போட்டியிடக் கோரி அதிமுகவினர் மனு
சென்னை : சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கான விண்ணப்ப மனு விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கியது. கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்களது தொகுதியில் போட்டியிடக் கோரி ஏராளமான அதிமுகவினர் மனுக்கள் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நேற்று காலை முதல் மனுக்கள் வாங்கி பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் அளிக்கலாம் என்று கட்சி கூறியிருந்தது.
இதையடுத்து நேற்று விற்பனை தொடங்கியது. பெருமளவில் கூட்டம் கூடி விட்டதால் சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து நிறைய கவுண்டர்களை அமைத்து விற்பனை செய்தனர்.
அனைவரும் வரிசையாக நின்று ரூ. 10,000 பணம் கட்டி விருப்ப மனுக்களைப் பெற்றனர். அதிமுக நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், கோகுல இந்திரா உள்ளிட்டோரும், மாவட்ட நிர்வாகிகளும் என மொத்தம் 27 பேர் தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று மனு அளித்தனர்.
இதேபோல், கட்சி நிர்வாகிகள் பலரும், தங்கள் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
தியாகராயநகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் கொடுத்தார்.
ஸ்ரீரங்கம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று பெருங்குடி பேரூராட்சி மன்ற தலைவர் கே.பி.கந்தனும், ஆலந்தூர், திருத்தணி, காஞ்சீபுரம், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடக்கோரி காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் மணப்பாக்கம் மு.காமராஜும் விருப்ப மனு கொடுத்தார்.
இதேபோல், காஞ்சீபுரம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக்கோரி முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வமும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடக்கோரி மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் வீரை கரீமும் மனுத்தாக்கல் செய்தனர்.
உத்திரமேரூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக்கோரி ஒன்றிய கழக செயலாளர் வாலாஜாபாத் கணேசனும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடக்கோரி விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.பி.ரகுநாதன், நகர செயலாளர் ஜி.பாஸ்கரன் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.
ராதாபுரம் தொகுதியில் போட்டியிட சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரையும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திரைப்பட இயக்குனரும், தலைமைக் கழக பேச்சாளருமான பி.சி.அன்பழகனும் விருப்ப மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications