பிப். 15க்குள் ஆஜராக வேண்டும்-லலித் மோடிக்கு இறுதிக் கெடு
சென்னை: சென்னை காவல்துறையின் சம்மனை ஏற்று பிப்ரவரி 15ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு சென்னை காவல்துறை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐபிஎல் நிதி மோசடி தொடர்பாக லலித் மோடி உள்ளிட்ட 7 பேர் மீது சென்னை காவல்துறையில், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் விசாரணைக்கு வருமாறு கூறி 7 பேருக்கும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் மோடியைத் தவிர மற்ற 6 பேரும் சம்மனைப் பெற்றனர். இருப்பினும் விசாரணைக்கு அஜய் சர்மா என்பவர் மட்டுமே ஆஜரானார்.
இதையடுத்து 6 பேருக்கும் 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. இதையும் இவர்கள் யாரும் வாங்கவில்லை.
இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில்,
2-வதாக அனுப்பப்பட்ட சம்மனையும் லலித்மோடி தரப்பில் வாங்கவில்லை. மற்ற 5 பேரும் சம்மனை வாங்கிக் கொண்டு, விசாரணைக்கு ஆஜராக பிப்ரவரி 15-ந் தேதி வரை கால அவகாசம் கேட்டுள்ளனர். பிப்ரவரி 15-ந் தேதிக்கு பிறகு லலித்மோடி மீது என்ன நடவடிக்கை என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
சென்னையில் உலககோப்பை கிரிக்கெட்டின் 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒரு ஆட்டத்தில் மட்டும் சென்னையில் விளையாடுகிறது. போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. போட்டிகள் நடைபெறுவதற்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுத் தகுதியுடன் விளங்குகிறது.
சென்னை மாணவர்கள் பஸ்தின விழாக்களை ஆட்டம், பாட்டத்தோடு ஊர்வலமாக சென்று கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விழா மாணவர்களோடு பழகிப்போனது. அதை ஒரே நாளில் மாற்றி விட முடியாது. கொஞ்சம், கொஞ்சமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆணையர்.












Click it and Unblock the Notifications