'அதிமுக ..அதிமுக...அதிமுக...'-சரத்குமாருக்கு பதில் தந்த தொண்டர்கள்
தென்காசி: வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை திருச்சி மாநாட்டில் அறிவிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
தென்காசியில் நேற்றிரவு சமகவின் பொது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சமக தலைவர் சரத்குமார் பேசியதாவது,
விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளோம். சுதந்திரம் பெற்ற பிறகும் 35.7 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ்தான் உள்ளனர். முதல்வர் கருணாநிதி ஏழைகள் இருக்கும் வரை இலவசம் உண்டு என்கிறார். கடந்த 1954-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை காமராஜர் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்தான் இன்றும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது, நடப்பது ஆட்சியா, ஊழலா? இதுவரை ஆற்று மணலை திருடி சம்பாதித்தவர்கள் தற்போது காற்றலைகள் மூலம் சம்பாதிக்கிறார்கள். ஆற்று மணலை அதிகமாக திருடினால் நீர்வளம் பாதிக்கும் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் மணலை கொள்ளையடித்து விட்டனர்.
மேலும், ஸ்பெக்ட்ரம் மூலம் இந்திய அரசுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு செய்துவிட்டனர். திமுக பொதுக்குழுவில் ராசா குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை நடவடிக்கையில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். இது மிகவும் புதுமையாக இருக்கிறது. கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாமல் கெஞ்சிப்பார்க்கும் நிலையில்தான் பாமக இருக்கிறது. தைரியமிருந்தால் தனித்து போட்டியிட்டு பாருங்கள். வரும் சட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் நடைபெற உள்ள திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும். அன்றைய தினமே வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்றார்.
முன்னதாக கூட்டத்தில் சரத்குமார், தமிழ்நாட்டில் நடப்பது ஊழல் ஆட்சி. இந்த ஆட்சி அகற்றப்படும் என்று பேசிவிட்டு, ''தப்பு செய்தவன் திருந்தியாகனும். தவறு செய்தவன் வருந்தியாகனும்'' என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாடினார்.
பின்னர் தொண்டர்களை பார்த்து, ''எந்தக் கட்சியுடன் நாம் கூட்டணி அமைக்க வேண்டும்? என்று சேலம் தேமுதிக மாநாட்டில் விஜய்காந்த் கேட்டது போல, மூன்று முறை கேள்வி எழுப்பினார்.
மூன்று முறையும் தொண்டர்கள் , அதிமுக ..அதிமுக...அதிமுக...என்று குரல் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications