தனித்து போட்டியிட்டால் திமுக, அதிமுக 15 இடங்களில் கூட வெல்லாது: பழ.நெடுமாறன்
திருச்சி: திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே பலமிழந்து வருவதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
திருச்சியில் "இன்றைய அரசியலும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலும்'' என்ற தலைப்பில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகளாகத் திகழும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் உண்மையில் மக்கள் மத்தியில் பலமிழந்து, தேய்ந்து வருகின்றன. கூட்டணி இல்லாமல் இந்த இரு கட்சிகளாலும் ஆட்சிக்கு வர முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பலமிக்க கூட்டணியாக இருந்தது. அதோடு பணத்தை பெருமளவில் செலவழித்தது திமுக. இவ்வளவு இருந்தும்கூட மூன்று இலக்கத் தொகுதிகளில் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை.
தனித்து நின்றால் திமுக, அதிமுக இந்த இரு கட்சிகளும் 10, 15 இடங்களில் வெற்றி பெறுவதே சிரமம்.
இந் நிலையில், தமிழ்த் தேசிய இயக்கங்கள், அமைப்புகளை ஒருங்கிணைத்து முற்போக்கு அமைப்புகளையும் சேர்த்துக் கொண்டு தனி அணியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த அணியை தமிழக மக்கள் ஆதரிப்பார்கள் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் இலங்கைத் தமிழர்களை எந்தவித விசாரணையுமின்றி 8 ஆண்டுகளாக அடைத்து வைத்துள்ளனர். இதுபோன்ற சிறப்பு முகாம்கள் மனித உரிமைக்கு எதிரானவை, சட்டவிரோதமானவை. அங்குள்ளவர்கள் மீது புகார் இருந்தால் வழக்கு நடத்தலாம். இல்லாவிட்டால அனைவரையும் விடுவிக்க வேண்டும்.
2ஜி விவகாரம் குறித்து விசாரித்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் அளித்த அறிக்கையில், 2003-2009ம் ஆண்டு வரை விதிமீறல்கள் அதிகம் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கபில் சிபலே கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் தகவல் தொடர்புத் துறையில் அமைச்சர் பொறுப்பிலிருந்தவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், இப்போதும்கூட எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி உண்மையை மறைக்க முயற்சிக்கிறார் கருணாநிதி என்றார்.












Click it and Unblock the Notifications