திமுக கூட்டணியில் பாமக நிச்சயம் சேரும்-திருமாவளவன்
பண்ருட்டி: வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பாமக இணையும் என்று
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு பொது மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசின் சாதனைகள் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை வழிவகுக்கும். மேலும் பா.ம.க. நிச்சயமாக தி.மு.க. கூட்டணியில் சேரும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. ஊடகங்களில் குறிப்பிடுவதுபோல இல்லை என்றார்.
6வது முறையும் கருணாநிதி தான் முதல்வர்-ஸ்டாலின்:
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 84 புதிய வகுப்பறை கட்டிடங்கள், அண்ணா பல்கலைக்கழக விழுப்புரம், திண்டிவனம் பொறியியல் கல்லூரிகளின் புதிய கட்டிடங்கள், பல்வேறு திட்டங்களின் வாயிலாக கட்டப்பட்ட கட்டிடங்களின் திறப்பு விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல், வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எங்கும் இல்லாத திட்டமான கலைஞர் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் குடிசை வீடுகளே இருக்கக்கூடாது என்ற அளவில் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்ட முடிவு எடுக்கப்பட்டு முதற்கட்ட மாக 3 லட்சம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தல் வரப்போகிறது, இந்த வீடுகள் எல்லாம் எப்படி வந்து சேரும் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். தெளிவான உறுதியோடு சொல்கிறேன் 6வது முறையும் கருணாநிதி தான் முதல்வராக வருவார். இந்த திட்டம் உங்களுக்கு வந்து சேரும். இந்த ஆட்சி தொடர வேண்டும். மீண்டும் கருணாநிதி ஆட்சி தான் வரும். யாரும் கவலைப்பட வேண்டாம். திட்டங்கள் தொடர்ந்து நிறைவேறும். அப்படிப்பட்ட நிலையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்காக இந்த மாவட்டத்திற்கு பலமுறை நான் வந்திருக்கிறேன். ஆனால் இந்த 41/2 ஆண்டுகளில் சுழல் நிதி வழங்க மட்டும் 4 முறை வந்துள்ளேன். 10,215 குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கி வருகிறேன். இதுவரை 1,89,618 குழுக்களுக்கு எனது கரங்களால் சுழல் நிதி வழங்கி இருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி வழங்க 1 மணி நேரமோ, 2 மணி நேரமோ ஏன் 3 மணி நேரமானாலும் நின்று கொண்டே வழங்கி வருகிறேன். இதற்காக நான் எடுத்துக்கொண்ட நேரம் நேற்று வரை 123 மணி நேரம் செலவு செய்துள்ளேன். செலவு என்று சொல்வதை திருத்திக் கொள்கிறேன். செலவு என்பதை திருத்தி பெருமை என கூறிக்கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications