பிப் 10 ம் தேதி அரசு ஊழியர் வேலை நிறுத்தம்!
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து பிப்ரவரி 10-ம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறாரகள்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கலைச்செல்வி, பொதுச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து வருகிற 10-ந்தேதி அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசுத்துறைகளிலும் பணியாற்றுகின்ற அரசு ஊழியர்கள் பங்கேற்கும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். காலி இடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியத்தை அப்படியே வழங்க வேண்டும்.
ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய சங்கங்களை அழைத்து பேச வேண்டும். வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட இதர படிகள் வழங்க வேண்டும். கலைஞர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இந்த சங்கத்தின் 60 துறை வாரியான சங்க ஊழியர்கள் சுமார் 2 லட்சம் பேர் இப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு பிறகும் அரசு, சங்கங்களை அழைத்து பேசவில்லை என்றால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
காலம் தாழ்த்தாமல் சங்கங்களை அரசு அழைத்து பேச வேண்டும், என்றனர்.












Click it and Unblock the Notifications