வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்துக்கும் இனி வரி உண்டு!-மத்திய அரசு
வரி ஏய்ப்பின் ஒரு பகுதியாக இந்திய தொழிலதிபர்கள் பல லட்சம் கோடி ரூபாய்களை வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.
இந்த விவரங்களைத் திரட்டி, கறுப்புப் பணத்தை பறிமுதல் செய்யுமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது, ராம்ஜெத்மலானி வழக்கில்.
இதன் விளைவாக, கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ள நாடுகளில் சிலவற்றிலிருந்து தகவலைப் பெற்றுள்ளது மத்திய அரசு. பஹாமாஸ், பெர்முடா, பிரிட்டிஷ் வர்ஜின் ஐலேண்ட், கேமன் ஐலண்ட், பிரிட்டி் ஐலேண்ட் ஆப் ஜெர்ஸி, செயின்ட் கிட்ஸ் நெவிஸ், அர்ஜன்டைனா மற்றும் மார்ஷல் ஐலேண்ட்ஸ் ஆகிய நாடுகள், அங்க இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பண கணக்கு விவரங்களை இந்தியாவுக்குக் கொடுத்துள்ளன.
இந்த நாடுகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போரில் 17 பேர் விவரங்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கேட்டு வாங்கி, அந்தப் பணத்துக்கும் இனி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பணத்தை தானாகவே இந்தியாவுக்கு கொண்டு வருவார்கள் சம்பந்தப்பட்ட கோடீஸ்வரர்கள் என்பது இந்தியாவின் கணக்கு.
இதற்காகவே நேரடி வரிவிதிப்பு மசோதாவில் பல திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மத்திய அரசு.