கூட்டணி இன்னும் முடிவாகவில்லை..அது பற்றி இப்போதைக்கு பேச முடியாது-ராமதாஸ்

சென்னை திரு.வி.க நகர் தொகுதி தேர்தல் களப் பணியாளர் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,
நாங்கள் இளைஞர்களை மையமாக வைத்து தேர்தல் வியூகம் அமைத்துள்ளோம். சினிமாக்காரர்கள் பின்னால் சென்று சீரழியாதீர்கள்,; கொள்கைப் பிடிப்புடன் வாழ இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை குறி வைத்து தீவிரமாக பணியாற்றுங்கள். கூட்டணி இன்னும் முடிவாகாததால், அது பற்றி இப்போதைக்கு ஏதும் பேச முடியாது. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் பணியாற்றத் தயாராக இருங்கள்.
தொப்புளில் பம்பரம் விடும் நடிகரின் கட்சி வரும் தேர்தலில் புறக்கணிக்கப்பட வேண்டும். இரண்டு திரைப்படம் நடித்தவர்கள் கூட முதல்வராக ஆசைப்படுகிறார்கள். சினிமாக்காரர்களின் கையில் தமிழகம் சிக்கினால் என்னவாகும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆந்திராவில் முதல்வர் கனவோடு கட்சி தொடங்கிய சிரஞ்சீவி போனியாகாமல் கட்சியை ஊற்றி மூடிவிட்டார். இந்த நிலைமை தமிழகத்தில் உள்ள சில கட்சிகளுக்கும் வரும்.
பாமகவை விட நல்ல கொள்கைகள் உள்ள கட்சி தமிழகத்தில் இருப்பது நிருபிக்கப்பட்டால், அந்த கட்சியில் நானே சேர்ந்து விடத் தயார் என்றார் ராமதாஸ்.
அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வராவி்ட்டால் தான் பாமகவுக்கு இடம் கிடைக்கும் என்றும், அப்படியே தேமுதிக இருந்தாலும் பாமக கூட்டணியில் சேர்ந்தால் விஜய்காந்துக்குத் தரப்படுவதை விடக் குறைவான இடங்களே பாமகவுக்குத் தரப்படும் என்று கூறப்படும் நிலையில் விஜய்காந்தை 'தொப்புளில் பம்பரம் விடும் நடிகர்' என்று ராமதாஸ் கடுமையாகத் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே அவர் தீவிரமாக முயல்வது தெரிகிறது.












Click it and Unblock the Notifications