கேரளாவில் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ. 200 சன்மானம்:கொடியேறி பாலகிருஷ்ணன்
திருவனந்தபுரம்: விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் வழங்கப்படும் என கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
கேரள சட்டசபையில் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியதாவது,
சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருடத்திற்கு சராசரியாக 4 ஆயிரம் பேர் விபத்துகளில் பலியாகின்றனர். 40 ஆயிரம் பேர் காயம் அடைகின்றனர். விபத்துகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் விதி முறைகளை மீறுபவர்களைக் கண்காணிக்க பல இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலை விதிகளை மீறும் ஏராளமானோர் சிக்குகின்றனர். எனவே மேலும் 15 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததால்தான் பெருமளவு உயிர் சேதம் ஏற்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் போலீஸ் வழக்குப் பதிவு செய்யும் என்ற அச்சமே இதற்கு காரணம். ஆனால் இனிமேல் யாரும் அப்படி பயப்பட தேவையில்லை. சாலை விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக தங்கள் காரிலோ அல்லது வேறு வாகனத்திலோ கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுக்கு இனிமேல் ரூ.200 சன்மானம் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு எஸ்பி அலுவலகங்கத்திற்கும் ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications