தூத்துக்குடி-கொழும்பு இடையே தோணி மூலம் சரக்கு போக்குவரத்து: நாளை துவக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு 3 ஆண்டுகளுக்கு பி்ன்னர் தோணி மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்குகிறது.
தூத்துக்குடியில் இருந்து காய்கறிகள், உப்பு , நாட்டு மருந்துகள், ஜல்லி கற்கள், மணல், பீடி, இலைகள் உள்ளிட்ட பொருட்கள் தோணிகள் மூலம் கொழும்பு, மாலத்தீவு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. இதுபோல அங்குள்ள பழைய இரும்பு பொருட்கள் தூத்துக்குடிக்கு தோணி மூலம் கொண்டு வரப்பட்டன. இலங்கையில் நிலவிய போர் சூழல் மற்றும் அங்குள்ள அரசின் நிலைப்பாடு ஆகிய காரணங்களால் இலங்கைக்கு தோணிகளில் சரக்குகள் கொண்டு செல்லப்படுவது படிப்படியாக குறைந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தற்போது மாலதீவுக்கு மட்டும் தூத்துக்குடியில் இருந்து இருமாதங்களுக்கு ஒரு முறை 40க்கும் மேற்பட்ட தோணிகளில் சரக்கு ஏற்றி செல்லப்படுகிறது. ஆனால் தற்போது வெரும் 6 தோணிகளில் மட்டுமே சரக்கு போக்குவரத்து நடக்கிறது. இதனால் தோணி தொழிலை நம்பியிருந்த பல குடும்பங்கள் நலிவுற்றன. தற்போது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் தோணி தொழிலுக்கு சாதகமாக உள்ளதால் தோணி மூலம் சரக்கு போக்குவரத்து மீ்ண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. நாளை 11-ம் தேதி காலை தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு சரக்கு தோணி புறப்பட்டு 24 மணி நேரத்திற்குள் இலங்கையை அடையும். முதலில் வாரம் ஒருமுறை சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் படிப்படியாக இது அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications