தமிழக சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி இன்று சென்னை வருகை

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதையடுதது தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஓட்டுப் பதிவுக்கு தேவையான ஏந்திரங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. வாக்காளர் இறுதி பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதை வழங்க மாநிலம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
இதற்கிடையே கடந்த மாதம் தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி சென்னை வந்து அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும், யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு ஒப்புகைச் சீட்டு தரப்பட வேண்டும் என்று அவரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஒப்புகைச் சீட்டு தருவது குறித்து ஆராய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.இந் நிலையில் குரேஷி இன்றிரவு மீண்டும் சென்னை வருகிறார்.
நாளை சென்னை கிண்டியில் இந்திய தொழில் நுட்ப கழகம் சார்பில் நடைபெறும் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் அவர் பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
ஒப்புகை சீட்டு வழங்குவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினரையும் சந்தித்துப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications