ஜெ. பிறந்த நாள்... 5 நாட்கள் கொண்டாட்டம்!
சென்னை: ஜெயலலிதா பிறந்த நாளை 5 நாட்கள் தொடர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளது அஇதிமுக.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63-வது பிறந்த நாளையொட்டி வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதிவரை 5 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றிய நகரங்களிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளைக் கழக நிர்வாகிகளுடனும் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறு பான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு, பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.