பால் கொள்முதலுக்கு கூடுதல் விலை! - வைகோ
சென்னை: பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு கூடுதல் விலை தரப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பால் உற்பத்தியாளர்கள், உற்பத்திச் செலவினை அடிப்படையாகக் கொண்டு கட்டுப்படியாகக் கூடிய நியாயமான விலை தர வேண்டும் என கோரிக்கை வைத்து, பிப்ரவரி 7-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக, பால்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இன்று வரையில் அழைக்க வில்லை.
எனவே, அரிசி, சமையல் எரிவாயு, பொங்கல் பொருள்களை மானிய விலையில் விற்பது போல், நுகர்வோருக்குப் பாதிப்பு இல்லாத வகையில், மானிய விலையில் பால் வழங்கிடவும், உற்பத்திச் செலவின் அடிப்படையில், கட்டுப்படியாகக் கூடிய விலை தருகின்ற வகையில், லிட்டர் ஒன்றுக்கு குறைந்தது ரூ.5 கூடுதலாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிடவும், மாநில அரசு முன் வரவேண்டும் என ம.தி. மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
-இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.