வெற்றி வாய்ப்புள்ள 90 தொகுதிகள் பட்டியல்-ராகுலிடம் ஒப்படைப்பு

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனையில் பங்கேற்ற ராகுல் காந்தி, முதல்வர் கருணாநிதியிடம் காங்கிரசுக்கு ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் 90 இடங்கள் கேட்டார்.
இந் நிலையில் சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவிடம் பேச அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் ஐவர் குழு நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றிய பட்டியலை கொடுத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கட்சியில் இளைஞர் காங்கிரசுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆர்வமாக உள்ளார். தற்போது இளைஞர் காங்கிரஸ் எழுச்சி பெற்று சிறப்பாக செயல்படுகிறது.
வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 90 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளோம். வெற்றி வாய்ப்புள்ள 90 தொகுதிகள் பட்டியலை ஏற்கனவே ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
இந்த பட்டியலை காங்கிரஸ் குழுவிடமும் கொடுத்திருக்கிறேன். இதுதவிர இளைஞர் காங்கிரசுக்கு 20 தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறேன். ராகுல் காந்தியின் விருப்பப்படி கட்சியில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.
இந் நிலையில் ஐவர் குழு காங்கிரசாருடன் இன்றும் தனது ஆலோசனைகளைத் தொடர உள்ளது.
காங்கிரசில் சீட்டுக்கு போட்டா போட்டி:
இதற்கிடையே இந் நிலையில் காங்கிரசில் சீட்டுக்காக போட்டா போட்டி நடந்து வருகிறது.
காங்கிரசில் கோஷ்டி அடிப்படையில் சீட்டு கேட்பது தான் வழக்கம். அந்த வகையில் திமுக எத்தனை சீட் கொடுக்குமோ அதை எப்படி பங்கு போடுவது என்று எல்லா கோஷ்டிகளும் முனைப்பாகியுள்ளன.
ராகுல் காந்தியின் நேரடி பார்வையில் இருப்பதாகக் கூறும் இளைஞர் காங்கிரஸார் திமுக ஒதுக்கும் சீட்டுகளில் எங்களுக்கும் 30 சதவீதம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சேவாதளத்திற்கு 5 சீட், மகிளா காங்கிரஸ் தங்களுக்கும் சீட் ஒதுக்க வேண்டும் என்று கோருகின்றனர்.












Click it and Unblock the Notifications