தேமுதிக கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சி?-டெல்லியில் பரபரப்பு

இதனால் தேமுதிக தலைவர் விஜய்காந்துடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவிடம் 90 இடங்கள், ஆட்சியில் பங்கு என்று நிபந்தனை போட்டுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. ஆனால், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது இதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று திமுக கூறியுள்ளது.கூட்டணியில் பாமக இணைந்தால் காங்கிரசுக்கு 50 இடங்கள், அவர்கள் வராவிட்டால் 65 இடங்கள் வரை தர திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் திமுகவை நெருக்கவோ என்னவோ டெல்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு தகவல் பரப்பிவிட்டுள்ளது. அதாவது, விஜய்காந்துடன் கூட்டணிக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது என்பது தான் இந்தத் தகவல்.
காங்கிரஸ் அமைத்த ஐவர் குழுவைச் சேர்ந்த ப.சிதம்பரம், வாசன் ஆகியோர் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சு நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், விஜய்காந்த் அனுப்பி வைத்த தூதர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்ததாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் செய்தி பரவியது.
விஜயகாந்தின் நெருங்கிய உறவினரான கட்சியின் முக்கிய பிரமுகர் நேற்று முன்தினம் இரவு முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் ராகுல் காந்தியின் நேரடி அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகவும், விமான நிலையத்திற்கே வந்து ராகுலுக்கு நெருக்கமான சிலர் அவரை அழைத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
அதே போல திமுகவை வலுவிழக்கச் செய்யவே கூட்டணியில் பாமகவை சேர்க்க வேண்டாம் என்று அவர்களிடம் காங்கிரஸ் கூறியதாகவும், அதே நேரத்தில் பாமகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் தனியாக பேச்சு நடத்தி வருவதாகவும் செய்தி பரப்பப்பட்டுள்ளது.
அதாவது திமுகவை கடைசி நேரத்தில் கழற்றிவிட்டுவிட்டு தேமுதிக-பாமகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்று தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.
இது குறித்து திமுக தரப்பில் கூறுகையில், இதை யார் பரப்பியது என்பதும் ஏன் பரப்பினார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்களிடம் அதிக இடங்களை வாங்குவதற்காகவும் ஆட்சியில் பங்கு தரப்படும் என்ற உறுதிமொழியை எங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெறவும் காங்கிரஸ் மேற்கொள்ளும் மீடியா தந்திரம் இது. இதையெல்லாம் எங்கள் தலைவர் சமாளிப்பார் என்றனர்.
காங்கிரஸ் திட்டவட்ட மறுப்பு:
இந் நிலையில் தேமுதிகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வரும் தகவல்கள் அடிப்படையே இல்லாதவை என்றும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி இன்று டெல்லியில் நி்ருபர்களிடம் தெரிவித்தார்.
அழகிரியுடன் விஜய்காந்த் தரப்பு பேச்சு?:
இதற்கிடையே மதுரையில் வசிக்கும் விஜய்காந்தின் சகோதரியும் அவரது கணவரும் (இருவரும் பிரபல டாக்டர்கள்) திமுக தென் மண்டலப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான அழகிரியை விஜய்காந்த் சார்பில் சில நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications