விஸ்வரூபமெடுக்கும் தாமிரபரணி பிரச்சினை: தூத்துக்குடியில் 23-ம் தேதி கடையடைப்பு!
தூத்துக்குடி: தாமிரபரணி குறுக்கே கட்டப்பட்டுள்ள கன்னடியன் கால்வாய் தடுப்புச் சுவர் உயரத்தை குறைக்கக் கோரியும், ஆற்றின் போக்கை திசை திருப்பி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதைக் கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி கடையடைப்பு நடத்துகிறார்கள் விவசாயிகள்.
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கன்னடியன் அணைக்கட்டின் பழைய மட்டத்தின் மேல் ஒரு மீட்டர் உயர்த்தியும், 515 நீளத்திற்கு ஆற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டி, ஆற்று தண்ணீர் வரத்தினை குறைத்து அதன் போக்கினை திசைமாற்றியும் விட்டது தமிழக அரசு. இதனை நதி நீர் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டம் என்று வேறு அரசு சொல்லிக் கொண்டது.
ஆனால் இந்த திட்டம் விவசாயிகளின் வயிற்றிலடிப்பது போலாகிவிட்டதாக பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தடுப்புச் சுவரில் புதிதாகக் கட்டப்பட்ட பகுதியை இடித்துவிட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விவசாயிகளிடம் புதியதாக கட்டிய தடுப்புசுவரை அகற்றி விடுவது என்று முடிவு செய்து ஒப்பந்தமும் போட்டனர். ஆனால் நிறைவேற்றவில்லை.
இதனை உடனடியாக நிறைவேற்றக் கோரி தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி வடிநில திட்டக்குழு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் 23ம் தேதி இதற்காக மாவட்டம் தழுவிய கடையடைப்பு நடத்தப்படுகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு தாமிரபரணி வடிநில திட்டக்குழு விவசாய சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு அமைப்பாக ஆதரவு திரட்டி வருகின்றனர். நேற்று இவர்கள் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட், லாரி உரிமையாளர் சங்கத்திற்கு சென்று ஆதரவு கேட்டனர்.
இதற்கான கூட்டம் காய்கறி மார்க்கெட் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் தாமிரபரணி வடிநில திட்டக்குழு சேர்மன் உதயசூரியன், லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாமுவேல், தாமிரபரணி முன்னாள் தலைவர் தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டத்திற்கு மார்கெட் சங்கம் சார்பில் கடையடைப்பு செய்து ஆதரவு தருவது என்றும், லாரி உரிமையாளர்கள் லாரியை நிறுத்தி ஆதரவு தெரிவிக்கவும் உறுதியளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications