அதிமுக கூட்டணியில் டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு ஒரு தொகுதி

நேற்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவும் சேதுராமனும் இது தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவருக்கு மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
தனது முதல் தொகுதிப் பங்கீட்டை புதிய தமிழகம், இந்தியக் குடியரசுக் கட்சி ஆகிய தலித் கட்சிகளுடன் செய்து கொண்ட ஜெயலலிதா, அடுத்ததாக முக்குலத்தோர் பிரிவு கட்சியான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதன்மூலம் முதலில் தலித் ஓட்டுகளுக்கும், அடுத்ததாக முக்குலத்தோர் சமுதாய வாக்குகளுக்கும் ஜெயலலிதா குறி வைத்துள்ளார். புதிய தமிழகம் கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்ப்பதற்கு முக்குலத்தோர் இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையி்ல் அடுத்தடுத்து இந்த இரு கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை வழங்கி, இரு தரப்பின் ஓட்டுகளையும் கவர ஜெயலலிதா முயன்றுள்ளார்.
சேதுராமனோடு சேர்த்து நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக்குக்கும் ஒரு தொகுதியை ஜெயலலிதா ஒதுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கார்த்திக் என்ன பிரச்சனை தந்தோரோ, அது இன்னும் நடக்கவில்லை.
கட்சி நிர்வாகிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை:
இந் நிலையில் சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தனது கட்சியின் நிர்வாகிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் போயஸ் கார்டனில் நடந்தது.
தேமுதிக தலைவர் விஜய்காந்த் இழுத்தடிப்பதால் அவரை இப்போதைக்கு விட்டுவிட்டு மற்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டு வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுவிட்டு தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தனது பிரசாரப் பயணத் திட்டம் குறித்தும் கூட்டத்தில் ஜெயலலிதா விவாதித்தார்.
அதைவிட முக்கியமான தேர்தல் செலவுக்கு பணம் திரட்டுவது தொடர்பாகவே இக் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
கூட்டுக் குழுவில் இடம் பிடிக்க எம்பிக்களுடன் ஆலோசனை:
இதைத் தொடர்ந்து அதிமுக எம்பிக்களுடனும் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
திங்கள்கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளட நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முன் வைத்து திமுகவுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த டிப்ஸ்களை ஜெயலலிதா தந்தார்.
மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைக்கப் போவது உறுதியாகிவிட்டதாகவும், அவ்வாறு அமைக்கப்படும் குழு வெறும் 7 உறுப்பினர்கள் குழுவாக இருந்தால் அதில் அதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காது என்றும் டெல்லியிலிருந்து கிடைத்த தகவலை தனது எம்பிக்களிடம் ஜெயலலிதா பகிர்ந்து கொண்டார்.
எனவே அதில் அதிமுகவுக்கும் இடம் கிடைக்கும் வகையில், அதிக உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்கக் கோரி அதில் இடம் கிடைக்க வாய்ப்பில்லாத பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுகவினர் மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்றும், அதை எப்படி செய்வது என்பது குறித்தும் எம்பிக்களுக்கு ஜெயலலிதா டிப்ஸ் தந்தார்.












Click it and Unblock the Notifications